மாருதி நெக்ஸா கார்களுக்கு புதிய ஜிபிஎஸ் சாதனம் அறிமுகம்!!
மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும் பிரிமியம் ரக கார்களுக்கான விசேஷ டிராக்கர் சாதனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும் பிரிமியம் ரக கார்களுக்கான விசேஷ டிராக்கிங் சாதனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மொபைல்போனுடன் பிரத்யேக செயலி மூலமாக இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும். இந்த சாதனத்தின் விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி கனெக்ட் என்ற பெயரில் இந்த புதிய டிராக்கிங் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும் மாருதி இக்னிஸ், பலேனோ, சியாஸ் மற்றும் எஸ் க்ராஸ் ஆகிய 4 கார்களுக்கு இந்த விசேஷ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சாதனத்திற்கு ரூ.9,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள மாருதியின் அனைத்து நெக்ஸா கார் ஷோரூம்களிலும் இந்த சுஸுகி கனெக்ட் சாதனத்தை வாங்கி பொருத்திக் கொள்ள முடியும்.

இந்த சாதனத்தை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஆப்பிள் மொபைல்போன்களுடன் நெக்ஸா மொபைல்போன் செயலி மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இந்த சாதனத்தின் மூலமாக காருக்கான பல்வேறு பாதுகாப்பு வசதிகளை உரிமையாளர்கள் பெற முடியும்.

நெக்ஸா மொபைல்போன் செயலியுடன் இணைத்த பிறகு, காரின் இருப்பிடம், கார் எங்கு செல்கிறது என்பதை தெரிவிக்கும் நிகழ்நேர தகவல்களை பெற முடியும். கார் ஓட்டும் முறை மற்றும் எச்சரிக்கை தகவல்களையும் மொபைல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த காரில் இருக்கும் டிசியூ என்ற கம்ப்யூட்டர் சாதனமானது, ஒருவேளை கார் விபத்தில் சிக்கி ஏர்பேக் விரிவடைந்தால், உடனடியாக கார் ஓட்டுனரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தானியங்கி முறையில் மொபைல்போனில் தகவல் அனுப்பிவிடும். மேலும், கார் எந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்ற தகவலும் தெரிவிக்கப்படும்.
காரில் ஏதேனும் பழுது ஏற்படும் வாய்ப்பு இருந்தாலும், உடனடியாக மாருதியின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக தேவைப்படும் உதவிகளை வாடிக்கையாளர் பெறவும் வழிவகை உள்ளது.

ஜியோ ஃபென்சிங் என்ற வசதி மூலமாக ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லையைவிட்டு கார் நகரும்போது அதுகுறித்து உரிமையாளரின் மொபைல்போனுக்கு எச்சரிக்கை வரும். இதன்மூலமாக, காரை வெளிநபர்கள் எடுத்துச் சென்றால் எளிதாக கண்டறிய முடியும்.

காரில் இல்லாத நேரத்தில் கூட கார் ஓடிய தூரம், எரிபொருள் அளவு, ஏசி உள்ளிட்டவற்றை மொபைல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த சாதனம் வழங்கும். இது நிச்சயம் நெக்ஸா கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் என்று நம்பலாம்.

மேலும், இசியூ கம்ப்யூட்டரை வெளியாட்கள் மாற்றம் செய்வதையும் தடுக்க முடியும். தனது அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய சாதனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








