புதிய எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டு ஹோண்டா!
புதிய எஸ்யூவி காரை களமிறக்குவது குறித்து ஹோண்டா கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கவாறு புதிய மாடல்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இந்த சூழலில், காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் கலக்கி வருகிறது. எனவே, இந்த செக்மென்ட்டில் ஒரு சிறப்பான எஸ்யூவி ரக கார் மாடலை இறக்கினால், வர்த்தகத்தை பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஹோண்டா கருதுகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் 2UA என்ற புதிய பிளாட்ஃபார்மில்தான் இரண்டாம் தலைமுறை மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை உருவாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவிக்கு கிடைக்க இருக்கும் வர்த்தக வாய்ப்பு குறித்து ஹோண்டா நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வுகள் சாதக அமையும் என்றே கருதப்படுகிறது.

"இந்தியாவில் சிறிய கார்களைவிட எஸ்யூவி ரக கார்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. எஸ்யூவி மார்க்கெட் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது," என்று எக்கானாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ஹோண்டா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோச்சிரோ யுனோ கூறி இருக்கிறார்.

அமேஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கும் புதிய எஸ்யூவி மாடல் 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் கார்களுக்கு நேர் போட்டியான அம்சங்களுடன் வரும்.

தற்போது ஹோண்டா ஜாஸ், அமேஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், சிட்டி காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்துவதற்கும் ஹோண்டாவுக்கு வாய்ப்புள்ளது.

விற்பனையில் சோபிக்காத மொபிலியோ எம்பிவி காரில் எஸ்யூவி போன்று மாற்றங்களை செய்து பிஆர்வி என்ற பெயரில் அறிமுகம் செய்தது. ஆனால், பிஆர்வி காருக்கும் எதிர்பார்த்த அளவு விற்பனை கிடைக்கவில்லை.

இந்த சூழலில்தான் புதிய எஸ்யூவி கார் இருப்பதன் அவசியத்தை ஹோண்டா கார் நிறுவனம் உணர்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அந்த நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








