புதிய மைல்கல்லை எட்டியதால் மஹிந்திரா உற்சாகம்... 4,500 கோடியில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவிற்கு அருகே உள்ள சகான் (Chakan) எனும் நகரில், மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. மஹிந்திரா & மஹிந்திராவின் துணை நிறுவனமான மஹிந்திரா வாகன உற்பத்தி லிமிடெட் (Mahindra Vehicle Manufacturers Ltd.,) நிறுவனம் இதனை நிர்வகித்து வருகிறது.

மஹிந்திராவின் சகான் தொழிற்சாலை கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த சூழலில், 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்கள் உற்பத்தி என்ற புதிய மைல்கல்லை இந்த பிளாண்ட் தற்போது எட்டியுள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

இங்கு எல்சிவி (LCV - Light Commercial Vehicle) எனப்படும் இலகு ரக வர்த்தக வாகனங்கள், எக்ஸ்யூவி500, டியூவி300, கேயூவி100 மற்றும் அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்கள், 49 டன்கள் வரையிலான கன ரக வர்த்தக வாகனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யூவி கார்தான் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சமாவது வாகனம் ஆகும். சகான் தொழிற்சாலையில் முதல் முறையாக உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் மஹிந்திரா மேக்ஸிமோ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முழு அளவிலான உற்பத்தியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இது சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஆகும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டியூவி300 காரில், மஹிந்திரா நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய டியூவி300 கார் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இருந்த வரவேற்பு தற்போது மஹிந்திரா டியூவி300 காருக்கு இல்லை. என்றாலும் கிராமப்புற பகுதிகளில் இன்னும் ஓரளவிற்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. இந்த சூழலில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், டியூவி300 காரின் விற்பனை இனி அதிகரிக்கும் என மஹிந்திரா நிறுவனம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.

இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும். சரி, மீண்டும் சகான் தொழிற்சாலைக்கு வருவோம். தற்போது சகான் தொழிற்சாலையின் பேஸ்-II விரிவாக்க பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதன் மூலம் இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 7.5 லட்சம் யூனிட்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மஹிந்திரா நிறுவனம் சுமார் 4,500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. கேயூவி100 மற்றும் டியூவி300 ஆகிய கார்கள் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 கார் 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போது இந்த தொழிற்சாலை இன்னும் பிஸி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








