கால் டாக்ஸி துறைக்கான பிரத்யேக வடிவமைப்பில் மாருதி சுஸுகி டூர் எம் அறிமுகம்... முழு விபரம்...!
மாருதி சுஸுகி நிறுவனம் கால் டாக்ஸி துறைக்கான பிரத்யேக வடிவமைப்பில் டூர் எம் என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலாக எர்டிகா பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இந்த எம்பிவி ரக காருக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்ததன் காரணமாக, அதன் இரண்டாம் தலைமுறை எர்டிகாவை அந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

இதற்கு முன்பாக விற்பனையில் இருந்த பழைய மாடல் எர்டிகா சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போதைய எர்டிகாவில் அதன் முன்னோடிகளின் புகழை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் காஸ்மெடிக் மற்றும் இன்டீரியரில் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகமானது.

எதிர்பார்த்தபடியே, இரண்டாம் தலைமுறை எர்டிகாவிற்கு தனியார் வாகன பிரிவில் நல்ல வரவேற்பு நிலவியது. இந்த காரில், முன்னதாக பொருத்தப்பட்டிருந்த 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் எஸ்எச்விஎஸ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற, சிறந்த நடவடிக்கையின் காரணமாக தற்போதைய எர்டிகா, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 9 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகின்றன.

இந்நிலையில், இந்த புகழ்வாய்ந்த எம்பிவி செக்மெண்ட் எர்டிகாவில், புதிய வெர்ஷன் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வெர்ஷனானது, தற்போது வேகமாக வளர்ந்து வரும் டாக்ஸி துறையைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி டூர் எம் என்ற பெயரில் களமிறங்கியிருக்கும் இந்த புதிய எம்பிவி ரக கார், பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கின்றது. இதனை, ரூ. 7.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்த நிறுவனம் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது.

டூர் எம் மாடலை மாருதி நிறுவனம் வி ட்ரிம் அம்சத்தில் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், இந்த காரின் முன்பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஸ்பீட் லிமிட் ஃபங்ஷன், ப்ளூ டுத் வசதியுடன் கூடிய ஸ்டீரியோ மற்றும் ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளன.

இத்துடன், எம்ஐடி கலர் தொழில்நுட்பத்திலான டிஎஃப்டி, எலக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம், ரியர் ஏசி வெண்ட் மற்றும் ட்யூவல் டோன் இன்டீரியர் உள்ளிட்ட பிரத்யேகமான வசதிகளும் வழங்கப்பட இருக்கின்றது.

இதுதவிர, மெக்கானிக்கலாக இந்த காரில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அவ்வாறு, இதன் தற்போதைய மாடலில் இருக்கும் எஞ்ஜின் ஆப்ஷனே, புதிதாக களமிறங்கியிருக்கும் டூர் எம் மாடலில் இடம் பெற்றுள்ளது. அந்தவகையில், 1.5 லிட்டர் கொண்ட 4-சிலிண்டர் எஸ்எச்விஎஸ் எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

அது, 104.7 பிஎஸ் பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இந்த காரில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி டூர் எம் கார் முழுக்க முழுக்க டாக்ஸித் துறையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வசதிகளே இதில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று, இந்த காரின் எக்கனாமி லெவலும் காரின் உரிமையாளருக்கு நல்ல வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், டூர் எம் லிட்டருக்கு 18.18 கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. ஆகையால், இந்த கார் அதன் உரிமையாளருக்கு குறைந்த அளவு செலவீணத்தையே ஏற்படுத்தும் என மாருதி நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








