5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்? முழு விபரம்!
5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முறை சிட்டி காருக்கு (Honda City) புத்துயிர் ஊட்டி வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரானது, 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்படியேதான் ஓடி கொண்டிருக்கிறது. எனவே அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே சர்வதேச அளவில் இந்த கார் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டீம்-பிச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பார்த்தால், புதிய ஹோண்டா சிட்டி கார் ஏறக்குறைய உருவாக்கப்பட்டு விட்டது தெரியவருகிறது. இதன்படி 5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரில், மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் உடனான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதில் பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை, 1.5 லிட்டர் ஐ-விடெக் (i-VTEC) யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். விரைவில் அமலாகவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இந்த இன்ஜின் இருக்கும்.

அதேசமயம் டீசல் இன்ஜினை பொறுத்தவரை, 98.6 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் (i-DTEC) யூனிட் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கும் இணங்கும் வகையில் இதில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும். ஆனால் ஹோண்டா சிட்டி டீசல் காரில் மிகவும் விலை உயர்ந்த எமிஷன் கண்ட்ரோல் உபகரணம் பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக இதன் விலை கூடுவதற்கான சூழல் நிலவுகிறது.

இதனிடையே பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டீசல் இன்ஜின் மேனுவல் ஆப்ஷனுடன் மட்டுமே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் இன்ஜின் மாடலில் சிவிடி ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை வழங்குவது தொடர்பான பேச்சுக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோண்டா நிறுவனம் அதனை செய்தால், சிட்டி டீசல் காரின் விலை மிகவும் அதிகரித்து விடும்.

5வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் வெளிப்புற டிசைனில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான துல்லிய தகவல்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளன. அதேபோல் பல்வேறு புதிய வசதிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2020 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ள புதிய சிட்டி செடான் காரை, ஹோண்டா நிறுவனம் அதே ஆண்டு (2020) மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்னும் ஒரு ஆண்டிற்குள் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.

முன்னதாக ஹோண்டா சிட்டி கார் கடந்த 2017ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட்டை பெற்றது. அதன் பின்பு தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஹோண்டா சிட்டி காரானது, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய மாடல்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








