மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் வருகை விபரம்!
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி புதிய பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி மாடல் ரெக்ஸ்டன். கடந்த 2017ம் ஆண்டு முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக தென்கொாரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்து வந்த மஹிந்திரா நிறுவனம், புதிய தலைமுறை மாடலை தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து, அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடலாக விற்பனையில் உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சாங்யாங் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில் ரெக்ஸ்டன் ஜி4 எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை புதிய டிசைன் அம்சங்களாக மாற்றம் கண்டுள்ளன.

இந்த புதிய மாடலில் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் , புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் புதிய கலர் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுளளன. உட்புறத்திலும் புதிய வண்ணத்துடன் பொலிவு கூட்டப்பபட்டுள்ளது. ஜன்னல்களுக்கு புதிய சன் ஷேடு மறைப்புகளும் உள்ளன.

2020 சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டன் எஸ்யூவியானது 4,850 மிமீ நீளமும், 1,960 மிமீ அகலமும், 1,825 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,865 மிமீ ஆக உள்ளது. மூன்று வரிசையிலும் சிறப்பான இடவசதியை இந்த கார் அளிக்கிறது.

இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎஸ் பவரையும், 421 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பரை வெளிப்படுத்தும் திறன் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கும் சிறந்த மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், புதிய சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஏற்கனவே, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய மாற்றங்களுடன் கூடிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








