டொயோட்டா கரோலா காரில் இந்த அளவிற்கு பாதுகாப்பு வசதியா... க்ராஷ் டெஸ்ட் வீடியோ..!
டொயோட்டா கரோலா கார் க்ராஷ் பரிசோதனையில் எதிர்பார்த்தபடியே சிறப்பான ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டொயோட்டா நிறுவனம், அதன் கரோலா செடான் ரக காரை 2020ம் ஆண்டிற்கு ஏற்பவாறு அப்கிரேட் செய்துள்ளது. பிரேசில் நாட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட இந்த காரை லத்தீன் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
காரின் பாதுகாப்பு அம்சம்குறித்து நடத்தப்பட்ட இச்சோதனையில் 2020 டொயோட்டா கரோலா கார் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருப்பதாக அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்ட தகவலின்படி, கரோலா செடான் ரக கார் உச்சபட்ச ரேட்டிங்கான 5 நட்சத்திரங்களை பெற்றிருக்கின்றது.
ஆகையால், இது பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்த கார் என்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இதில் பயணிப்பவர்களுக்கு எத்தகைய விபத்திலும் பெரியளவில் ஆபத்து நேராது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த காரை யூரோ என்சிஏபி அமைப்பு இதேபோன்று க்ராஷ் டெஸ்ட் பரிசோதனை செய்தது. அப்போதும், தற்போது பெற்றிருப்பதைப் போன்றே 5 நட்சத்திரங்களைப் பெற்று டொயோட்டா நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது கரோலா கார்.
மேலும், இப்பரிசோதனையின்போது கரோலா பிராண்டில் விற்பனைச் செய்யப்படும் ஹேட்ச்பேக் ரக காரும் க்ராஷ்டெஸ்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு கதவுகளைக் கொண்ட செடான் ரக கார், ஒட்டுமொத்தமாக சோதனை உபகரணங்களுடன் சேர்த்து 1681 கிலோ எடைக் கொண்டதாகும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர் பேக்குகள், சீட் பெல்ட், எஸ்பிஆர், 4 சேனல் ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

லத்தீன் என்சிஏபி அமைப்பு, டொயோட்டா கரோலா செடான் ரக காரின்மீது மூன்று விதமான க்ராஷ் டேஸ்ட் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், காரின் முன்பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் துருவ பகுதி என அனைத்து பக்கங்களிலும் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 29.41 புள்ளிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் எடுத்துள்ளது டொயொட்டா கரோலா. தொடர்ந்து, காரின் ஓட்டுநருக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் அது சிறப்பானது மற்றும் நடுநிலை தர வரிசையைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், முன்பக்கத்தில் அமரும் பயணிக்கும் இதே மாதிரியான பாதுகாப்பு வழங்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஓட்டுநரைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, பக்கவாட்டு பகுதிகுறித்து செய்யப்பட்ட ஆய்வில், கார் நல்ல தரமானதாக உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காரின் உடற் பகுதி லேசான பாதிப்பை மட்டுமே பெற்றுக்கொண்டு, உட்பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு சிறிய சிறிய காயங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆனால், காரை இயக்கும் ஓட்டுநருக்கு மட்டும் விபத்தின்போது சில காயங்களை ஏற்படுத்தும் என என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஓட்டுநரின் கால் மற்றும் மார்பக பகுதிக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

தொடர்ந்து, இந்த காரில் குழுந்தைகளுக்கு நிலவும் பாதுகாப்புகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது. இத்துடன் செய்யப்பட்ட இஎஸ்சி மற்றும் எஸ்ஆர்ஐ உள்ளிட்ட அம்சங்கள் பற்றிய ஆய்வில் சிறப்பான தரவரிசையைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
டொயோட்டோவின் இந்த புதிய கரோலா செடான் ரக கார் வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த காரின் அதிக விலை மற்றும் தற்போது சந்தையில் நிலவும் அதிக போட்டி போன்ற காரணங்களால் அதன் அறிமுகம் சந்தேகத்தை எழுப்புவதாக வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று, கரோலாவின் ஹேட்ச்பேக்கின் அறிமுகமும் கேள்விக்குறியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications








