இந்தியாவில் டீசல் கார் உற்பத்தி குறித்த முக்கிய முடிவை எடுத்த ஆடி!
இந்தியாவில் டீசல் கார் விற்பனை குறித்த முக்கிய முடிவை ஆடி கார் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் -6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு குறைவான மாசு உமிழ்வு திறன் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் எஞ்சின்களை கார் நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு தக்கவாறு விலையும் கணிசமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டீசல் கார்களுக்கான எதிர்காலத்திலும் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது.

எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு மாருதி, ரெனோ உள்ளிட்ட கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இயற்கை எரிவாயு மற்றும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.

இந்த சூழலில், மாருதியை தொடர்ந்து ஆடி கார் நிறுவனமும் டீசல் கார் உற்பத்தியை இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான்," பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வரும்போது பெட்ரோல் மாடல்களுடன் துவங்க திட்டமிட்டுள்ளோம்.

எனினும், டீசல் மாடல்கள் முற்றாக விலக்கப்படாது. மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்கள் குறித்து தீவிர ஆய்வுகளை செய்து முடிவுக்கு வருவோம். வலுவான சந்தையை பெறும் மாற்று எரிபொருள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்," என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி ஏ6 சொகுசு செடான் காரில் பெட்ரோல எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, எதிர்காலத்தில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகனங்கள் பக்கம் ஆடி கார் நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் கார்களை முற்றாக விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு, முற்றாக விலக்கப்படாது. ஆனால், பெட்ரோல் மற்றும் மாற்று எரிசக்தியில் இயங்கும் கார் மாடல்களை தேர்வு செய்வதற்கு வாடிக்கையாளர்களிடம் பரிந்துரை செய்வோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை கார்கள் பெரும்பாலும் டீசல் மாடல்களே இருந்தன. ஆனால், தற்போது இந்த சந்தையில் பெட்ரோல் மாடல்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்களும் பரந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் உள்ளனர்," என்றும் பல்பீல் சிங் தில்லான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








