இந்தியாவில் விலை குறைவான எஸ்யூவியை களமிறக்க ஆடி நிறுவனம் திட்டம்!
இந்தியாவில் விலை குறைவான புதிய சொகுசு ரக எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு அறிந்ததே. சொகுசு கார் மார்க்கெட்டிலும் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு அதிகம். குறிப்பாக, ஆடியின் க்யூ வரிசை எஸ்யூவி மாடல்களுக்கு அதிக மவுசு உள்ளது. தற்போது ஆடி நிறுவனத்தின் க்யூ3, க்யூ5, க்யூ7 உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன.

இந்த மாடல்களில் க்யூ3 எஸ்யூவி மாடல்தான் விலை குறைவான மாடலாக ஆடி கார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், க்யூ-3 எஸ்யூவியைவிட விலை குறைவான க்யூ-2 எஸ்யூவி காரையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த காரை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதாவது, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டன.

ஏற்கனவே, 3,000சிசி பெட்ரோல் எஞ்சின் அல்லது 2,500சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்து எந்த மாற்றங்களும் செய்யாமல் நேரடியாக விற்பனை செய்ய முடியும். ஆனால், தற்போது தளர்த்தப்பட்ட விதிகளின்படி, முதல் 2,500 கார்களை எந்த மாற்றமும் செய்யாமலேயே இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விதி தளர்வை பயன்படுத்தி, க்யூ-2 எஸ்யூவியை வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஆடி கார் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில்தான் ஆடி க்யூ-2 கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான விலையில் புதிய ஆடி க்யூ-2 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆடி க்யூ-3 காருக்கு ஆரம்ப கட்டத்தில் கிடைத்ததை போலவே, இந்த எஸ்யூவிக்கும் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
Source: Deccanchronicle


Click it and Unblock the Notifications








