ஆடி க்யூ-7 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் எஞ்சின் வருவதில் சந்தேகம்!
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஆடி க்யூ-7 எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் தேர்வு இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஆடி க்யூ-7 எஸ்யூவி முதன்மையான தேர்வாக விளங்குகிறது. குறிப்பாக, சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் மாடலாக வலம் வருகிறது. கவர்ச்சிகரமான டிசைன், அசத்தலான சிறப்பு அம்சங்கள் இந்த காருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ஆடி க்யூ-7 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய மாடலைவிட இந்த புதிய மாடல் நீளத்தில் 11 மிமீ கூடுதலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் விரைவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய மாடலில் இரண்டு விதமான டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் பின்னர் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்று தெரிகிறது. விலையை அதிகம் நிர்ணயிக்க வேண்டி இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களிடம் எடுபடாது என்று ஆடி கருதுகிறது.

எனினும், டீசல் மாடலுக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்தால், அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்க ஆடி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆடி க்யூ-7 காரின் டீசல் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. எனினும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் இந்த மாடலுக்கு கல்தா கொடுக்க வேண்டிய கட்டாயம் ஆடி கார் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துவுடன் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மின்சார கார் மாடல்களுக்கு மட்டுமே மவுசு இருக்கும் என்று ஆடி கூறி இருக்கிறது. மேலும், டீசல் மாடல்களில் கவனம் செலுத்தமாட்டோம் என்றும் ஆடி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications








