டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை உருவாக்க பிஎம்டபிள்யூ - டெய்ம்லர் ஒப்பந்தம்!
டிரைவரில்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மற்றும் டெய்ம்லர் ஆகிய நிறுவனங்கள் சொகுசு கார் தயாரிப்பில் உலகப் பிரபலமான நிறுவனங்களாகவும், நேரடி போட்டி நிறுவனங்களாகவும் இருந்து வருகின்றன. இந்த நிலையில், முதலீடுகளை குறைத்து விரைவாக தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. இது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

டிரைவரில்லாமல் கார் இயங்குவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஓட்டுனருக்கு உதவிபுரியும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுனர் உதவி இல்லாமல் வாகனங்கள் இயங்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்த கூட்டணி இணைந்து உருவாக்க முடிவு செய்துள்ளது.

மேலும், ஓட்டுனர் உதவி இல்லாமல், தானியங்கி முறையில் கார் மற்றும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்குவதற்கும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் நீண்ட கால கூட்டணியை அமைத்துள்ளன.

பிஎம்டபிள்யூ மற்றும் டெயம்லர் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வரும் 2024ம் ஆண்டு இரு நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் கார்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நெடுஞ்சாலைகளில் டிரைவரின் உதவி இல்லாமல் இயங்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரண்டாம் கட்டமாக, நகரங்களில் டிரைவரில்லா முறையில் கார்கள் இயங்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியின் சின்டெல்ஃபிங்கனிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் தொழில்நுட்ப மையம், இம்மென்டிங்கெனிலுள்ள டெய்ம்லர் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையம், மூனிச் அருகில் உட்டர்செலிசிம் பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ ஆட்டோனாமஸ் டிரைவிங் காம்பஸ் உள்ளிட்ட இடங்களில் டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகள் நடக்க இருக்கின்றது.

உயர் வகை சென்சார்கள், கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டேட்டா ஸ்டோரேஜ் மையங்கள், சாஃப்ட்வேர், ஒருங்கிணைப்பு சாதனங்கள் உருவாக்கப் பணிகள் என அனைத்து வகையான பணிகளும் இந்த மையங்களில்தான் நடைபெற இருக்கின்றன. இந்த பணிகளில் 1,200 பணியாளர்கள் ஈடுபட இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








