இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலை இதுதான்... நவம்பர் மாதத்திற்கான கார் விற்பனை நிலவரம்
2019 நவம்பர் மாதத்திற்கான கார்களின் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதன்படி பார்க்கும்போது பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் கடந்த மாதத்தில் மிக பெரிய சரிவை கண்டுள்ளது தெரிய வருகிறது.
இருப்பினும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் விற்பனை மந்த நிலையை சில நிறுவனங்கள் முறியடித்துள்ளன. குறிப்பாக ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் போன்ற நிறுவனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன. முன்னணி நிறுவனங்களின் கடந்த மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

மாருதி சுசுகி
இந்திய மார்க்கெட்டில் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் மாருதி சுசுகி, கடந்த மாத இந்திய சந்தையின் மொத்த விற்பனையில் பாதி எண்ணிக்கையை விற்பனையான கார்களின் எண்ணிக்கையாக கொண்டுள்ளது. ஆட்டோமொபைலில் ஏற்பட்ட மந்த நிலையால் பாதிப்படைந்த இந்நிறுவனம் இந்த வருடத்தின் துவக்கத்தில் விற்பனையில் மிக பெரிய சரிவை அடைந்திருந்தது.

இந்த நவம்பரில் 141,400 யூனிட்கள் என்ற அதிக விற்பனை எண்ணிக்கையை இந்நிறுவனம் பெற்றிருந்தாலும் இது 146,018 யூனிட் கார்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 3.2 சதவீதம் குறைவாகும். வெளிநாட்டு சந்தை விற்பனையில் இந்நிறுவனம் 6,944 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 7.7 சதவீதம் கூடுதலாகும். ஆனால் கடந்த ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் வெளிநாட்டு சந்தையில் 7,521 யூனிட் கார்களை விற்பனை செய்திருந்தது.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பண்டிக்கை கால முடிவில் கடந்த மாத விற்பனையில் வீழ்ச்சியவே சந்தித்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 38,057 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 50,470 கார்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 25 சதவீதம் குறைவாகும்.

இந்த விற்பனை வீழ்ச்சி குறித்து டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை பிரிவின் இயக்குனர் மயங்க் பரீக் கூறுகையில், பண்டிக்கை காலத்திற்கு அடுத்து மாதத்தில் வழக்கம்போல விற்பனை குறைந்துள்ளது. டாடா நிறுவனம் தற்சமயம் பிஎஸ்6 கார்களின் தயாரிப்பிற்கு தயாராகி வருகிறது. அதேநேரத்தில் சில்லறை விற்பனையிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.

ஏனெனில் டாடா நிறுவனத்தின் சில்லறை விற்பனையில் கார்கள் மொத்த விற்பனையை விட 15 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்றார். டாடா நிறுவனம், நெக்ஸான் இவி, அல்ட்ராஸ் மற்றும் கிராவிட்டாஸ் என அடுத்தடுத்து தயாரிப்புகளை வெளியிடவுள்ளது.

மஹிந்திரா
இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் சரிவை கண்ட மூன்றாவது நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. 38,614 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ள இந்நிறுவனம் 2018 நவம்பர் மாதத்தை காட்டிலும் 7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2018 நவம்பரில் இந்நிறுவனம் 41,564 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பயணிகள் வாகன விற்பனையில் இந்நிறுவனம் 10 சதவீத விற்பனை வீழ்ச்சியை கடந்த மாதத்தில் அடைந்துள்ளது. கடந்த மாதத்தில் 14,637 பயணிகள் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே 2018 நவம்பர் மாதத்தில் 16,188 பயணிகள் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவின் முதன்மை அதிகாரி விஜே ராம் நக்ரா கருத்து தெரிவிக்கையில், கடந்த சில மாத விற்பனையில் இருந்து ஆட்டோமொபைல் துறை நல்ல பாடத்தை கற்று கொண்டிருக்கும். ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில், குறிப்பாக பயணிகள் வாகனங்களுக்கு தேவை ஏற்படும் என்பதால், மந்த நிலை நீங்க அதிக வாய்ப்புள்ளது என்றார்.

ஹூண்டாய்
இந்திய மார்க்கெட்டில் உள்ள கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் உள்பட மிக சில நிறுவனங்கள் தான் கடந்த மாதத்தில் விற்பனையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹூண்டாய் கடந்த நவம்பர் மாதத்தில் 2 சதவீத வளர்ச்சியுடன் 44,600 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது 2018 நவம்பரில் இந்நிறுவனத்தில் இருந்து விற்பனையான கார்களின் எண்ணிக்கை 43,709 ஆகும்.

வெளிநாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் 15,900 கார்கள் 2018 நவம்பரை விட 25.2 சதவீத கூடுதல் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் 60,500 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இது 56,411 கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2018 நவம்பர் மாதத்தை விட 10 சதவீதம் கூடுதலாகும்.

ஹோண்டா கார்ஸ் இந்தியா
கடந்த மாதத்தில் மிக பெரிய விற்பனை சரிவை அடைந்த நிறுவனமாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விளங்குகிறது. உள்நாட்டு சந்தையில் 6,459 கார்களையும், வெளிநாட்டு சந்தையில் வெறும் 105 கார்களை மட்டும் தான் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 13,006 கார்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட சுமார் 50 சதவீதம் குறைவாகும்.

இந்த மிக பெரிய விற்பனை சரிவு குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவின் இயக்குனர் ராஜேஷ் கோயல் கூறுகையில், நாங்கள் எதிர்பார்த்தை விட கடந்த மாதத்தில் அதிகமாக தான் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஏனெனில் நாங்கள் பிஎஸ்4 கார்களின் விற்பனையில் கடைசி பகுதியில் உள்ளோம். இதனால் இனி வரும் மாதங்களில் பிஎஸ்6 கார்களின் அறிமுகம் தொடர்ச்சியாக இருக்கும் என்றார்.

டொயோட்டா
இந்திய சந்தையில் வீழ்ச்சியை அடைந்துள்ள மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள டொயோட்டா, மொத்த விற்பனையில் 19 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை கடந்த மாதத்தில் அடைந்துள்ளது. 2019 நவம்பரில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 9241 ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 11,390 ஆகும்.

மேலும் உள்நாட்டு சந்தை விற்பனையிலும் இந்நிறுவனம் 22 சதவீத விற்பனை வீழ்ச்சியுடன் 8312 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. ஆனால் வெளிநாட்டு சந்தை விற்பனையில் இந்நிறுவனம் மிக சிறிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை கார்களின் எண்ணிக்கை 669 ஆகும். இந்த எண்ணிக்கை இந்த வருடத்தில் 929 யூனிட்களாக முன்னேறியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன்
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், கடந்த மாதத்தில் விற்பனையில் வளர்ச்சியை கண்ட மற்றொரு நிறுவனமாக விளங்குகிறது. 2937 யூனிட் கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ள இந்நிறுவனம் 2501 யூனிட்கள் விற்பனையான 2018 நவம்பர் மாதத்தை விட 17 சதவீத வளர்ச்சியை இதன் மூலம் அடைந்துள்ளது.

இந்த விற்பனை வளர்ச்சி குறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவின் இயக்குனர் ஸ்டெஃபென் நாப் கூறுகையில், கடந்த மாதத்தில் எங்களது நிறுவனம் அடைத்துள்ள வளர்ச்சி கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களது நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர் வைத்துள்ள நம்பிக்கை காட்டுகிறது என கூறினார்.

ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இவ்வாறு விற்பனையில் வளர்ச்சியை அடைந்திருந்தாலும் கடந்த மாதத்திலும் ஆட்டோமொபைலில் நிலவிவரும் மந்த நிலை தொடர்ந்துள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. விரைவில் ஆட்டோமொபைல் துறையில் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதியினால் இந்த மந்த நிலையில் எதாவது மாற்றங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








