அரபு தேசத்திற்கு மாறும் டக்கார் ராலி: வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது
டக்கார் ராலி பந்தயத்தை சவூதி அரேபியாவுக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மோட்டார் பந்தய வீரர்களுக்கு அதிசவாலான உலகின் மிக கடினமான பந்தயமாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. மிக கடினமான நிலப்பரப்புகள், மோசமான சீதோஷ்ண நிலைகளில் இந்த டக்கார் ராலி நடத்தப்படுகிறது. இந்த ராலி பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக துணிச்சலும், உடல் வலுவும் மிக அதிகம் தேவைப்படுகிறது.

முதல்முறையாக 1979ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவின் செனிகல் நாட்டிலுள்ள டக்கார் என்ற இடத்திற்கு இந்த மிக நீண்ட தூர ராலி பந்தயம் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகள், மோசமான நிலப்பரப்புகளை கடந்தும் செல்வதே போட்டியின் முக்கிய நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது. இதுதான் உண்மையான டக்கார் ராலி பந்தயமாக இருந்தது.

இந்த நிலையில், டக்கார் ராலி பந்தயத்திற்கு மாரித்தானியா நாட்டில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால், 2008ம் ஆண்டு டக்கார் ராலி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, 2009ம் ஆண்டு முதல் டக்கார் ராலி பந்தயம் தென் அமெரிக்க நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டக்கார் ராலி பந்தயத்தை சவூதி அரேபியாவிற்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டுக்கான டக்கார் ராலி சவூதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது.

2020ம் ஆண்டு டக்கார் ராலி சவூதி அரேபியாவிற்குள்ளாகவே நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதுடன், ரியாத் நகரில் துவங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் அருகிலுள்ள ஓமன், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்த பாலைவனப் பகுதி மற்றும் ஆசிர் மலைத்தொடர் இருப்பதால் டக்கார் ராலிக்கு தகுந்த இடமாக கருதப்படுகிறது. அதேபோன்று, மைனஸ் 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையும் வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக டக்கார் ராலி நிர்வாகம் சவூதி அரேபியா அரசுடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பிற அரபு நாடுகளுடன் விரைவில் முறைப்படியான ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பது தெரிய வந்துள்ளது. டக்கார் ராலி அரபு நாடுகளுக்கு மாற்றப்படுவதன் மூலமாக அப்பகுதியில் மோட்டார் பந்தய ரசிகர்கள் மூலமாக சுற்றுலா வெகுவாக மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








