அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அடுத்தடுத்து வெளியாகி வரும் இந்த அறிவிப்புகளால் வாடிக்கையாளர்கள் நடுக்கம்
இந்தியாவின் கார் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையிலான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

ஜப்பானை சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் டட்சன் (Datsun) பிராண்டை நிர்வகித்து வருகிறது. டட்சன் பிராண்டின் கீழ் வெளிவரும் கோ (GO) மற்றும் கோ ப்ளஸ் (GO+) கார்கள் இந்திய மார்க்கெட்டில் ஓரளவு புகழ்பெற்ற மாடல்களாக திகழ்கின்றன. இந்த சூழலில், அப்டேட் செய்யப்பட்ட கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள், இந்திய மார்க்கெட்டில் கடந்த அக்டோபர் மாதம் களமிறக்கப்பட்டன.

அப்டேட் செய்யப்பட்ட கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் முறையே ரூ.3.29 லட்சம் மற்றும் ரூ.3.83 லட்சம் என்ற ஆரம்ப விலைகளில் கிடைக்கின்றன. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில், 14 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆம்பர் ஆரஞ்ச் மற்றும் சன்ஸ்டோன் ப்ரவுன் என்ற 2 புதிய கலர் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

இந்த சூழலில் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலையை உயர்த்த நிஸான் நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை உயர்விற்கு பல்வேறு பொருளாதார காரணிகள் மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ள நிறுவனங்களின் பட்டியலில் நிஸானும் இணைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ், ரெனால்ட், மஹிந்திரா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலையை ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் (Renault Kwid) காரின் விலையை மூன்று சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதே சமயம் மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்துகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்வானது 0.5-2.7 சதவீதம் வரை இருக்கும். இதில் மஹிந்திரா மராஸ்ஸோ, அல்டுராஸ் மற்றும் எக்ஸ்யூவி300 உள்ளிட்ட மாடல்களும் அடங்கும். இந்த 3 மாடல்களும் மஹிந்திரா நிறுவனத்தால் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மூவர் கூட்டணிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் தனது சில மாடல்களின் விலை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்களுடைய கார்களின் விலையும் உயரவுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக ஆரம்பத்தில் கார்களின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








