இந்தியாவில் டட்சன் கார் விற்பனை தொடரும்?
இந்தியாவில் டட்சன் கார் பிராண்டில் கார் விற்பனை தொடர்ந்து நடைபெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

விலை குறைவான பட்ஜெட் கார் மாடல்களை டட்சன் பிராண்டில் விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம். இந்தியா, ரஷ்யா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளிலும் டட்சன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகத்தை சீர்படுத்தும் முயற்சியில் நிஸான் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பணியாளர் குறைப்பு மற்றும் இதர செலவீனங்களை குறைத்து லாபத்தை அதிகரிக்க திட்டங்களை வகுத்துள்ளது. அதில், நஷ்டத்தில் செயல்படும் டட்சன் பிராண்டிற்கும் மூடுவிழா நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கடந்த அக்டோபரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதனால், டட்சன் கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் மற்றும் முன்பதிவு செய்திருந்தோர் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர் பிந்தைய சேவையை நிஸான் ஷோரூம்கள் மூலமாக வழங்கும் வாய்ப்பு இருந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உதிரிபாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்பதுடன், ரீசேல் விலை மதிப்பும் வெகுவாக குறையும்.

இந்த நிலையில், ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் டட்சன் பிராண்டில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்தியாவில் தொடர்ந்து டட்சன் பிராண்டு செயல்பட இருப்பதாக ஜப்பானிலிருந்து வெளிவரும் நிகேய் வர்த்தக இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யாவில் டட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானில் விரைவில் டட்சன் கார் உற்பத்தி துவங்க இருப்பதாகவும், இந்தியாவில் டட்சன் கார் உற்பத்தி தொடர்ந்து நடக்க இருப்பதாகவும், உடனடியாக உற்பத்தி நிறுத்தப்படாது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. வழக்கம்போல் உள்நாடு மற்றும் சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு டட்சன் பிராண்டுக்கு மறுபிறப்பு கொடுத்து விலை குறைவான பட்ஜெட் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தது நிஸான் நிறுவனம். வளர்ந்து வரும் கார் சந்தையை குறிவைத்து பல நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு டட்சன் பிராண்டு நிஸானுக்கு கைகொடுக்கவில்லை.

நிஸான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கார்ல் கோஸன் மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து, டட்சன் பிராண்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், புதிதாக தலைமை அதிகாரியாக பதவி ஏற்றுள்ள மகடோ உசிடா பல்வேறு நிர்வாக மற்றும் வர்த்தக சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், டட்சன் பிராண்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Source: Nikkei


Click it and Unblock the Notifications








