பிஎஸ்-6 டீசல் கார்களை விற்பனை செய்ய ஃபோர்டு திட்டம்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய டீசல் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு ஏதுவாக, பெட்ரோல், டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தும் பணிகளில் கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

எனினும், பெட்ரோல் எஞ்சின்களைவிட டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு மிக அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதனால், டீசல் கார்களுக்கு விடை கொடுக்கும் திட்டத்தை மாருதி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

இந்த சூழலில், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் தொடர்ந்து டீசல் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு நிர்வாக இயக்குனர் வினய் ரெய்னா கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எஞ்சின் தேர்வுகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.

டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் எண்ணம் இல்லை. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாகவே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தி விடுவோம்," என்று தெரிவித்துள்ளார்.

டீசல் கார்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதால், விலையை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும். அதாவது, தற்போதைய விலையைவிட 8 முதல் 10 சதவீதம் அளவுக்கு கார் விலையை உயர்த்தும் நிலை ஏற்படும்.

இதனால், வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு வெகுவாக குறையும் என்று கார் நிறுவனங்கள் கருதுகின்றன. இதனை மனதில் வைத்துத்தான் மாருதி கார் நிறுவனம் கூட அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு எஞ்சின் ஆப்ஷன்களை தொடர்ந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஃபோர்டு நிறுவனத்தின் டீசல் கார்களுக்ககு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதனை தக்கவைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கால் பதித்து கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக கடந்த நிதி ஆண்டில் ஃபோர்டு நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்தநிலையில், முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிக்கும் விதமாக, மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








