இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிவடைவது ஏன்? உங்களுக்கு தெரியாத மற்றொரு காரணம் இதுதான்...
இந்தியாவில் கார் விற்பனை மிக கடுமையாக சரிந்து வருகிறது. குறிப்பாக ஹோண்டா நிறுவன கார்கள் விற்பனை கிட்டத்தட்ட சரிபாதியாக குறைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது வீழ்ச்சி பாதையில் பயணித்து கொண்டுள்ளது. இப்படி ஒரு கடுமையான சரிவை இதற்கு முன் கண்டதில்லை என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி உள்பட அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனையும் கடந்த சில மாதங்களாக 'டல்' அடித்து கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஹோண்டாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. அதுவும் சாதாரண சரிவல்ல. 48.67 சதவீதம் என்கிற அளவிற்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது ஹோண்டா.

கிட்டத்தட்ட ஹோண்டா கார்களின் விற்பனை சரிபாதியாக குறைந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலை மட்டும் இதற்கு காரணம் அல்ல. கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததும் கூட ஒரு காரணம்தான்!! 2018 ஹோண்டா அமேஸ் கார் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2018 அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர தொடங்கியது. இதன் காரணமாக இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஹோண்டாவின் மொத்த விற்பனை எண்ணிக்கையில், அமேஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

இதன் விளைவாக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா 19,970 கார்களை விற்பனை செய்தது. சேல்ஸ் சார்ட்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கை வந்தது கடந்த 2018ம் ஆண்டில் ஹோண்டாவிற்கு நல்ல செய்தியாகதான் இருந்தது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 10,250 யூனிட்கள்தான். இது 48.67 சதவீத சரிவு. அதாவது இது கிட்டத்தட்ட சரிபாதி வீழ்ச்சி. அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் ஹோண்டா அமேஸ் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் அதன் விற்பனை படிப்படியாக வீழ்ச்சியடைய தொடங்கி விட்டது.

அதன்பின் ஹோண்டா நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை ஓரளவிற்குதான் நன்றாக இருந்து வந்தது. ஆனால் இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இதில், ஹோண்டாவும் தப்பவில்லை. ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது மற்றொரு அதிசயமும் அரங்கேறி வருகிறது.

ஹூண்டாய் வெனியூ, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்கள் இந்திய மார்க்கெட்டின் புது வரவுகள். இதுதவிர கியா செல்டோஸ் எஸ்யூவி காரும் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

மேற்கண்ட கார்களுக்கான புக்கிங் மிக சிறப்பாக உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் இந்திய வாடிக்கையாளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், புதிதாக ஏதேனும் ஒன்றை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது.இந்தியாவில் தற்போது கார்கள் விற்பனை சரிந்து கொண்டே வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








