கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி கார்!
ஹோண்டா சிட்டி காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் ஜூலை 1 முதல் கார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, கார்களில் சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கு தக்கவாறு பெரும்பாலான நிறுவனங்கள் கார்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை சேர்த்து வருகின்றன.

அந்த வகையில், ஹோண்டா சிட்டி காரிலும் சில கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது ஹோண்டா சிட்டி காரின் முன் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

தவிரவும், கார் 80 கிமீ வேகத்தை தாண்டி செல்லும்போது பீப் ஒலி எழுப்பி வேக எச்சரிக்கை செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹோண்டா சிட்டி காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏேர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கூடுதல் வசதிகள் மூலமாக காரில் பயணிப்போரின் பாதுகாப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி கார் 2014ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

2017ம் ஆண்டு புதுப்பொலிவுடன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் மேம்படுத்தப்பட்டுள்ளளது. எனினும், அதிக பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய மாடலைவிட வடிவத்தில் பெரிய கார் மாடலாகவும், அதிக இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தரத்திலும் முற்றிலும் புதிய யுக கார் மாடலாக இருக்கும். இந்த காரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும் விலையில் எந்த மாறுதல்களும் இல்லை. ரூ.9.68 லட்சம் முதல் ரூ.13.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் ஹோண்டா சிட்டி கார் மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் மற்றும் டொயோட்டா யாரிஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








