புதிய ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை!
ஹோண்டா கார் நிறுவனமும் தற்போது ஜாஸ் காரின் மின்சார மாடலை இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹோண்டா ஜாஸ் காரின் மின்சார மாடல் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அதன் ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் பார்க்கலாம்.

அடுத்த சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்கள் பெருமளவு புழக்கத்திற்கு வரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. அதன்படி, பல முன்னணி கார் நிறுவனங்கள் மின்சார கார்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்னதாக சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து வருகின்றன.

அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனமும் தற்போது ஜாஸ் காரின் மின்சார மாடலை இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் ஹோண்டா ஜாஸ் காரானது ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் இரண்டாம் தலைமுறை ஃபிட் எலெக்ட்ரிக் கார் மாடல்தான் தற்போது டெல்லியில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கார் டெல்லி சாலைகளில் சென்றபோது எடுக்கப்பட்ட படங்களை நியூஸ்18 செய்தி தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் காரிலிருந்து சில டிசைன் வேறுபாடுகளை இந்த ஜாஸ் ஃபிட் கார் பெற்றிருக்கிறது. முகப்பு டிசைனில் மாற்றங்கள் உள்ளன. இந்த காரில் தனித்துவமான 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஃபிட் மின்சார காரில் 331 வோல்ட் திறன் கொண்ட மின் மோட்டாரும், 20kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரியும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 225 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் வரை பிடிக்கும். குயிக் சார்ஜர் மூலமாக 20 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

இதனிடையே, ஜாஸ் எலெக்ட்ரிக் காரைவிட குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது 150 கிமீ தூரம் முதல் 200 கிமீ தூரம் வரை ரேஞ்ச் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த புதிய கார் 2023ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் மாடலானது ரூ.16 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 10,000 மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்யும் நோக்கில் ஹோண்டா திட்டங்களை தீட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








