இந்தியாவில் ஹோண்டா கார்களின் விலை ஜூலை மாதம் முதல் உயர்கிறது... காரணம் இதுதான்...
இந்தியாவில் ஹோண்டா கார்களின் விலை வரும் ஜூலை மாதம் முதல் உயரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. தரமான அதே சமயம் பாதுகாப்பு நிறைந்த ஹோண்டா கார்கள் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. இந்திய மார்க்கெட்டும் அதற்கு விதி விலக்கு அல்ல. இந்த சூழலில், இந்தியாவில் ஹோண்டா கார்களின் விலை வெகு விரைவில் உயரவுள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் தனது அனைத்து கார்களின் விலையையும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றின் காரணமாகவே ஹோண்டா நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவுள்ளது.

புதிய பாதுகாப்பு விதிமுறைகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும், டிரைவர் ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் சிட்டி காரை, ஸ்பீட் அலர்ட் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அப்டேட் செய்தது. எனினும் அப்போது சிட்டி காரின் விலையை ஹோண்டா நிறுவனம் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்தின் தற்போதைய இந்திய லைன் அப், அமேஸ், ஜாஸ், டபிள்யூஆர்-வி, பிஆர்-வி, சிஆர்-வி, சிட்டி, சிவிக் மற்றும் அக்கார்டு ஆகிய கார்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்த சூழலில் ஹோண்டா நிறுவன கார்களின் விலை மாடலை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா கார்களின் விலை உயர்வு தொடர்பான இன்னும் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதனிடையே ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி (HR-V) இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா எச்ஆர்-வி எஸ்யூவி கார் பல்வேறு சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்திய மார்க்கெட்டிலும் எச்ஆர்-வி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக வரும் பண்டிகை காலத்தில் ஹோண்டா எச்ஆர்-வி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் ஹோண்டா எச்ஆர்-வி போட்டியிடும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா எச்ஆர்-வி பெரும் ஆவலை தூண்டியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அடுத்து வெளிவரவுள்ள மற்றொரு முக்கியமான கார் அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டிதான்.

அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி தாய்லாந்தில் சோதனை செய்யப்படும்போது கேமரா கண்களில் சிக்கியது. அனேகமாக இந்திய மார்க்கெட்டில் அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வரும் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மஹிந்திரா நிறுவனமும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் கார்களின் விலை உயர்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








