பவர்ஃபுல் ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் சொகுசு காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவக்கம்!
ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவியின் சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் கார் நிறுவனத்தின் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல் எஃப்-பேஸ். இதன் அடிப்படையில் கூடுதல் திறன் வாய்ந்த மாடலை ஜாகுவார் நிறுவனத்தின் பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிரிவான எஸ்விஆர் உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக இந்த புதிய மாடலை ஜாகுவார் அறிமுகப்படுத்தியது. ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சக்திவாய்ந்த எஃப்-பேஸ் எஸ்யூவி சில தினங்களுக்கு முன் ஜாகுவார் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த எஸ்யூவிக்கு இந்தியா முழுவதும் உள்ள ஜாகுவார் டீலர்களஇல் முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த காரின் அறிமுக தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், வரும் பிப்ரவரி மாதம் இந்த புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜாகுவார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்விஆர் எஸ்யூவியில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 680 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்சினுடன் ஸ்போர்ட்ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 283 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

சாதாரண எஃப்-பேஸ் எஸ்யூவியைவிட அதிக சக்திவாய்ந்த இந்த எஞ்சினை சமாளிக்கும் விதத்தில், இதன் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு 30 சதவீதம் வரையிலும், பின்புற சஸ்பென்ஷன 10 சதவீதம் வரையிலும் கூடுதல் இறுக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், கையாளுமையும் சிறப்பாக இருக்கும்.

இந்த காரின் சக்கரங்களில் 395 மிமீ விட்டமுடைய டிஸ்க்குகள் கொண்ட ஆற்றல் வாய்ந்த பிரேக் சிஸ்டம் இந்த காரை கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த எஸ்யூவியில் நான்கு குழாய் அமைப்புடைய சைலென்சர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த எஸ்யூவியில் சிறப்பான சைலென்சர் சப்தத்தை வழங்குவதற்காக ஆக்டிவ் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் வேரியபிள் வால்வ் ஆக்டிவ் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஆளுமையான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் கூடுதல் ஆக்சஸெரீகள் அடங்கிய பாடி கிட் பொருத்தப்பட்டு இருக்கிறது. 25 மிமி கூடுதல் அகலம் கொண்ட 21 அங்குல ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

உட்புறத்திலும் பல்வேறு சிறப்புகளுடன் வருகிறது. இந்த காரில் எஸ்விஆர் முத்திரையுடன் கூடிய இருக்கைகள், தையல் வேலைப்பாடுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் உறையுடன் அழகாக இருப்பதுடன், அலுமினியத்தாலான பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

புதிய ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் கார் ரூ.1 கோடி விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ரேஞ்ச்ரோவர் எஸ்விஆர் மாடலைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், கோடீஸ்வரர்களின் கவனத்தை இந்த கார் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








