புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பிரிமீயம் எஸ்யூவி காரின் விலை மற்றும் இதர முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரிமீயம் ரக ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஜீப் ரேங்லர் இருந்து வருகிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அளவிலும் புதிய தலைமுறை மாடலாக ஜீப் ரேங்லர் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த புத்தம் புதிய மாடல் இந்தியாவில் அன்லிமிடேட் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மிக கம்பீரமான தோற்றம், பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கார் பிரியர்களை இந்த எஸ்யூவி வசீகரிக்கும். பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முகப்பை வசீகரமாக காட்டுகிறது.

பக்கவாட்டில் பெரிய கதவுகள், பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த காரில் பினந்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகளும், பின்புற கதவில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்பேர் வீலும் மிடுக்கான எஸ்யூவி தோற்றத்தை வழங்குகிறது. ஸ்பேர் வீல் சற்றே தாழ்த்தி கொடுக்கப்பட்டு இருப்பதால், பின்புறம் வரும் வாகனங்களை ஓட்டுனர் தெளிவாக பார்க்க இயலும்.

உட்புறத்தில் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது. பாரம்பரியம் மிக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பு, வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், டேஷ்போர்டில் சதுர வடிவில் காட்சி தரும் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், அலங்கார பாகங்கள் கவர்ச்சியாக இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 7.0 அங்குல மின்னணு திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆஃப்ரோடு இயக்கத்தின்போது காரின் இயக்கம் குறித்து பல்வேறு தகவல்களை இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை மூலமாக ஓட்டுனர் பெற முடியும். சப் ஊஃபர் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரிமீயம் மியூசிக் சிஸ்டம் உள்ளது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 270 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவரை செலுத்தும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

பழைய மாடலில் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இந்த எஸ்யூவியில் உள்ள எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்துடன்தான் வந்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில், பிஎஸ்-6 எஞ்சின் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி பிரைட் ஒயிட், பிளாக், கிரானைட் க்றிஸ்டல், பில்லெட் சில்வர் மற்றும் ஃபயர் கிராக்கர் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

ரூ.63.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பிரிமீயம் எஸ்யூவி கார் அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








