ஜீப் ரேங்லர் மோயப் ஆஃப்ரோடு எஸ்யூவி இந்திய வருகை விபரம்!
புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களையும், இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த மாதம் கடைசி வாரத்தில் புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக ஓவர்டிரைவர் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும், ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் உயர்வகை ஆஃப்ரோடு வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் ரேங்லர் ரூபிகன் மாடலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் ரேங்லர் ரூபிகன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் அந்த மாடலானது இந்தியாவில் மோயப் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியானது ஜேஎல் என்ற புதிய கட்டமைப்பு கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை ரேங்லர் எஸ்யூவி செங்குத்தான பகுதிகளில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிறப்பான வடிவமைப்பு மாற்றங்களை பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி 227 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. இதனால், எந்த சாலைநிலைகளையும் அனாயசமாக எதிர்கொள்ளும். அதேபோன்று, 30 அங்குல ஆழம் வரையிலான நீர் நிலைகளில் செல்லும் தகவமைப்புகளை பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ஜீப் ரேங்லர் ரூபிகன் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது. இதில், 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 274 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

எனினும், இந்தியாவில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் வர அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 488 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும்.

இந்த ஆஃப்ரோடு மோயப் வேரியண்ட்டில் ராக்- ட்ராக் பார்ட் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. விசேஷமான சஸ்பென்ஷன் அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக கூறலாம். கருப்பு வண்ண அலாய் வீல்கள், ஆஃப்ரோடு டயர்கள், மோயப் ஸ்டிக்கர்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவியானது ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்ரோடு வேரியண்ட்டாக வர இருக்கும் மோயப் மாடலானது விலை உயர்ந்த மாடலாக விற்பனை செய்யப்படும்.
Source: Overdrive


Click it and Unblock the Notifications








