மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 2.5 லிட்டர் மாடல் விற்பனை நிறுத்தம்!
மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 2.5 லிட்டர் டீசல் மாடல் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ இந்தியர்கள் அதிகம் விரும்பும் எஸ்யூவி மாடல் என்ற பெருமைக்குரியது. எஸ்யூவி மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக கோலோய்ச்சி வந்த மாடல் மஹிந்திரா பொலிரோ. ஆனால், புதிய எஸ்யூவி மாடல்களின் வரவால் சில இடங்கள் பின்தங்கியது. இருப்பினும் விற்பனையில் மஹிந்திராவுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கார் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சாதாரண மாடலிலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட பவர் ப்ளஸ் என்ற இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.

இந்த நிலையில், மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் 2.5 லிட்டர் டீசல் மாடல் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்ட வேண்டியிருக்கிறது.

இதையடுத்து, மஹிந்திரா பொலிரோ 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. ஆனால், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட பவர் ப்ளஸ் மாடலானது தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் மாடல் அண்மையில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டி70 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎஸ் பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடலின் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பிஎஸ்-6 தரச் சான்று அராய் அமைப்பிடமிருந்து கிடைத்துவிட்டது. எனினும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் பிஎஸ்-6 மாடலானது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








