பிஎஸ்-6 எஞ்சினுடன் வருகிறது புதிய மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ்!
மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் வருகைக்கு முன்னர் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடல் என்ற பெருமையை மஹிந்திரா பொலிரோ பெற்றிருந்தது. ஆனால், அதன் பிறகு விற்பனை குறைந்தாலும், இன்னமும் இந்தியாவில் சிறந்த எஸ்யூவி தேர்வாக இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார் மாடலும் மஹிந்திரா பொலிரோதான். கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனையில் 12 லட்சத்தையும் தாண்டி அசத்தி வருகிறது. நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் எஞ்சினுக்கு சர்வதேச ஆட்டோமொட்டிவ் தொழில்நுட்ப மையத்திடமிருந்து (ICAT) பிஎஸ்-6 தரச் சான்றையும் பெற்றிருக்கிறது. இதனால், விரைவில் புதிய மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவி அடுத்த சில மாதங்களில், அதாவது 2020ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்படுவதோடு, பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகிறது. ஏர்பேக்குகள், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான சீட்பெல்ட் வார்னிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் ஆகியவையும் இந்த புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியில் உட்புறத்தில் எதிரொலிப்பு இல்லாத ரியர் வியூ மிரர், முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் சேர்க்கப்படுகின்றன.

திய மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையு், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்டான்டர்டு பொலிரோ எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கும் ஒப்பாக மஹிந்திரா பொலிரோவின் கட்டுமானமும் மேம்படுத்தப்பட இருக்கிறது. மொத்தத்தில் அதிக பாதுகாப்பு வசதிகள், குறைவான மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான சிறந்த எஸ்யூவி மாடலாக வாடிக்கையாளர் தேர்வில் முதன்மை பெறும்.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியை தவிர்த்து, புதிய தார் எஸ்யூவியும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டிசைன் மற்றும் தொழில்நுட்ப அளவில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா தார் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








