மஹிந்திரா ஸ்கார்பியோ, தார், எக்ஸ்யூவி500 புதிய அவதாரம்... போட்டியாளர்களை காலி செய்ய மும்முரம்...
மஹிந்திரா ஸ்கார்பியோ, தார் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மூன்று கார்களும் புதிய அவதாரம் எடுக்கின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம், தார், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய கார்களின் அடுத்த தலைமுறை வெர்ஷன்களை களமிறக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதில், அடுத்த தலைமுறை தார் மற்றும் ஸ்கார்பியோ கார்களை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தும் பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இந்த மூன்று மாடல்களையும், 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் வெளியிடும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளது.

இதில், அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை பொறுத்தவரை புத்தம் புதிய மோனோகோயிக் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்டு சி-எஸ்யூவி காரிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க ஃபோர்டு மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த சி-எஸ்யூவி, வரும் 2020ம் ஆண்டின் இறுதியில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அதே நேரத்தில் புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார், புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினை பெறவுள்ளது. மார்க்கெட்டை விட்டு வெளியேறவுள்ள 2.2 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றாக இது இருக்கும். அத்துடன் இந்த இன்ஜின் பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.

அதே சமயம் இந்த இன்ஜின் 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை தார் மற்றும் ஸ்கார்பியோ கார்களிலும் இந்த இன்ஜின்தான் பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால் வெவ்வேறு வகையில் ட்யூன் செய்யப்படும்.

இதனிடையே டீசல் இன்ஜின் மட்டுமல்லாது, புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினையும் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 பெறும் என கூறப்படுகிறது. புதிய 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்களை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 1.5 லிட்டர் இன்ஜின் மஹிந்திரா மராஸ்ஸோ காரிலும், 2.0 லிட்டர் இன்ஜின் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500 காரை டிசைன் செய்யும் பணிகளில், இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற டிசைன் ஹவுஸான பினின்ஃபரீனா, மஹிந்திரா நிறுவனத்திற்கு உதவி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








