கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது மஹிந்திரா... இந்தியாவில் செய்யப்போகும் அதிரடி இதுதான்...
மஹிந்திரா நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் கடுமையான பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. எனவே பிஎஸ்6 விதிமுறைகளுக்கு இணையான கார்களை இந்திய மார்க்கெட்டில் உற்பத்தியாளர்கள் வரிசையாக அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளனர். இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவும் பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த வகையில் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் பிஎஸ்6 மாடல் மராஸ்ஸோவாக இருக்கலாம் என தெரிகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புத்தம் புதிய டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவிகளுடன் இது போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில் மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் தற்போது இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஸ்பை படத்தை Thrust Zone வெளியிட்டுள்ளது. மஹிந்திராவின் அமெரிக்க டெக்னிக்கல் சென்டரால் டெவலப் செய்யப்பட்ட முதல் கார் மராஸ்ஸோதான் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா மராஸ்ஸோ புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பெற்றுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. தற்போதைய நிலையில் இந்த இன்ஜின் பிஎஸ்4 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக மட்டுமே உள்ளது. எனவே இதனை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 வரும் தீபாவளி சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎஸ்6 விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டாலும், பவர் மற்றும் டார்க் திறன்களில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மைலேஜில் மாற்றம் இருக்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவியில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கிடைத்து வருகிறது.

ஆனால் பிஎஸ்6 விதிமுறைகள் அமலுக்கு வரும் சமயத்தில், மராஸ்ஸோ காரின் பெட்ரோல் வெர்ஷனையும் அறிமுகம் செய்வோம் என, இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் மஹிந்திரா தெரிவித்திருந்தது. எனவே மராஸ்ஸோ காரில் பெட்ரோல் இன்ஜினை நாம் அடுத்த ஆண்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என தெரிகிறது. தற்போது உள்ள மாடலை போலவே இருப்பதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. இதுதவிர தார், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களின் அடுத்த தலைமுறை வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எக்ஸ்யூவி300 மற்றும் கேயூவி100 ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் மஹிந்திரா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புத்தம் புதிய கார்களில் சிலவற்றை, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








