2020 மஹிந்திரா தார் மாடலின் உட்புற புகைப்படங்கள் கசிந்தன...
மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள புதிய மஹிந்திரா தார் மாடல் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த பிஎஸ்6 மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முறை இந்த புதிய தார் மாடலின் உட்புற பாகங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பார்த்தோமேயானால், இந்த மாடலில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் புதிய வடிவில் ஸ்டேரிங் வீல் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இவற்றுடன் எம்ஐடி (மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே)-ஐ கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் இந்த மஹிந்திரா மாடல் கொண்டுள்ளது. இவற்றை எல்லாம் விட வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த மாடலில் 4x4 லெவர் பொருத்தப்பட்டுள்ளது. தார் மாடலில் உள்ள 2 வீல் ட்ரைவ் (RWD) ஹை, 4 வீல் ட்ரைவ் ஹை மற்றும் 4 வீல் ட்ரைவ் லோ என்ற மூன்று மோட்களில் இந்த 4x4 லெவர் வித்தியாசமான நிலைகளையும் டிசைன்களையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பு வசதிகளும் முந்தைய மாடலை விட இந்த 2020 தார் மாடலில் அதிகமாக தரப்பட்டுள்ளன. இந்த பிஎஸ்6 ஜீப்பில் பின்புற இருக்கைகள் பக்கவாட்டுகளில் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மாடல் 5 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் அமைப்பை பொறுத்த வரையில் மஹிந்திரா நிறுவனம் தற்போதைய பிஎஸ்4 மாடலில் உள்ள 2.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கு பதிலாக பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட புதிய 2.0 டீசல் என்ஜினை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றப்படி பெட்ரோல் வேரியண்ட்டை மஹிந்திரா நிறுவனம் வழங்கவுள்ளது என்பதெல்லாம் வதந்தி என்றே கூறப்படுகிறது.

தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் விற்பனையாகி வரும் தார் மாடலில் உள்ள 2.5 லிட்டர் டீசல் என்ஜின் 105 பிஎச்பி பவரையும் 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இந்த மாடலின் பின்புற சக்கரங்களை போர்க்வார்னர் ட்ரான்ஸ்ஃபர் கேஸ் மூலமாக இயக்க முடியும்.

2020 தார் மாடலை பற்றிய எந்தவொரு தகவலையும் இதுவரை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் மேற்கூறப்பட்டுள்ள அப்டேட்களை எல்லாம் நிச்சயம் புதிய பிஎஸ்6 தார் மாடலில் எதிர்பார்க்கலாம். இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தார் 700 என்ற லிமிடேட் வெர்சன் மாடலையும் சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

வெறும் 700 யூனிட்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஜீப்பின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.9.99 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. தார் மாடலை போல இந்த தார் 700 மாடலும் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள், ஸ்பெஷல் ஸ்டிக்கர்ஸ், இருக்கை அமைப்பு போன்றவற்றை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் இருந்து பெற்றிருந்தது.

மஹிந்திரா தார் மாடல் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் மாடலை தவிர்த்து இந்திய சந்தையில் எந்த மாடலுடனும் நேரடியாக போட்டியிடவில்லை. 2020 தார் தற்போதைய மாடலை விட அதிகமான தொழிற்நுட்பங்கள் மற்றும் டிசைன் அமைப்புகளுடன் அறிமுகமாகவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு இதன் மீது உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








