குட் நியூஸ்... மாருதி எர்டிகா பிஎஸ்-6 டீசல் மாடல் உறுதியானது!
மாருதி எர்டிகா காரின் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் மாடல் வருவது மீண்டும் உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி கார் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று மாருதி எர்டிகா. எம்பிவி ரக கார்களில் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. டிசைன், இடவசதி, விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருவதால், மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக உள்ளது.

மாருதி எர்டிகா கார் தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, மாருதி எர்டிகா காரின் டீசல் மாடல் வருவது சந்தேகமாக இருந்தது. பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட இருந்தது.

ஏனெனில், மாருதி நிறுவனம் டீசல் கார் விற்பனையை தவிர்க்க இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாருதி எர்டிகா காருக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்த தவறக்கூடாது என்ற முனைப்பில் இப்போது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலும் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி எர்டிகா கார் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதற்கான சான்றுடன் அந்த கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்த படங்களும் வெளியாகி உள்ளன.

எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு அமலுக்கு வரும்போது மாருதி எர்டிகா கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் வரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால், மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலை வாங்க காத்திருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஏற்கனவே பிஎஸ்-6 தரத்திற்கு நிகராக மேம்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான முதலீடுகளை மனதில் வைத்து விலையும் கணிசமாக அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

அண்மையில் மாருதி எஸ் க்ராஸ் காரிலும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாருதி ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்று தெரிகிறது. அதாவது, பட்ஜெட் கார்களில் அதிக விலை ஏற்ற வேண்டியிருக்கும் என்பதால், இந்த முடிவை மாருதி சுஸுகி எடுத்துள்ளது.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








