இந்தியாவில் சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் பென்ஸ்!
பேட்டரியில் இயங்கும் சொகுசு மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நம்பர்-1 ஆக விளங்குகிறது. இருப்பினும், சந்தைப் போட்டியை மனதில் வைத்து பல புதிய மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. எதிர்காலத்தில் மின்சார கார்களுக்கான காலமாக இருக்கும் என்பதால், இந்த சந்தையில் முன்கூட்டியே இடத்தை பிடித்துவிடும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எக்கானமிக் டைம்ஸ் தளத்திடம் அளித்த பேட்டியில்," இந்த ஆண்டு இறுதியில் சொகுசு மின்சார கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறி இருக்கிறார். எனினும், குறித்த கால அளவை அவர் தெரிவிக்கவில்லை.

பாரத் ஸ்டேஜ்- 6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக எஞ்சின்களை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேநேரத்தில், ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

புதிய கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். எங்களிடம் அனைத்து ரகத்திலும் ஹைப்ரிட் மாடல்கள் உள்ளன. உலக அளவில் செல்வதற்கான தகுதிகளை பெற்ற இந்த மாடல்களை இந்தியாவிற்கு பொருத்தமாக இருக்குமா என்பதை ஆய்வு செய்து முடிவு செய்வோம்," என்று அவர் கூறி இருக்கிறார்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQC என்ற மின்சார கார் மாடல்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்தியில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

இந் காரில் 80 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், 0 -100 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் பயணிக்கும்.

இந்த கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த புதிய கார் ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் டெஸ்லா மாடல் எக்ஸ் 75டி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

பட்ஜெட் கார் நிறுவனங்களே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு தயக்கத்துடன் திட்டங்களை தீட்டி வரும் நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதிரடியாக மின்சார கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








