அதிரடி... இன்னும் ஒரு சில வாரங்களில் பிஎஸ்-4 வாகனங்களின் விற்பனை நிறுத்தம்... சொன்னது யார் தெரியுமா?
இந்தியாவில் இன்னும் ஒரு சில வாரங்களில் பிஎஸ்-4 வாகனங்களின் விற்பனையை நிறுத்த உள்ளதாக முன்னணி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளன. தலைநகர் டெல்லியிலேயே காற்றின் தரம் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களும் ஒரு காரணமாக உள்ளன.

எனவே வாகனங்களால் காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில், மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதிமுறைகள்தான் நடைமுறையில் உள்ளன.

ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும், பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணக்கமான வாகனங்களை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான வாகனங்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.

எனவே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தற்போது தங்களது தயாரிப்புகளை வேக வேகமாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 காலக்கெடு நெருங்க இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே ஒரு சில நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை விற்பனைக்கும் அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த சூழலில் ஜெர்மனியை சேர்ந்த லக்ஸரி கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் பிஎஸ்-4 கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டதாக நேற்று (டிசம்பர் 3) அறிவித்துள்ளது. மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில், இந்தியாவில் பிஎஸ்-4 கார்களை விற்பனை செய்வதையும் நிறுத்த உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் பிஎஸ்-4 கார்களை உற்பத்தி செய்வதை கடந்த சில வாரங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்வெங்க் கூறியுள்ளார். அதேபோல் அடுத்த ஒரு வாரங்களில் பிஎஸ்-4 கார்களின் விற்பனையையும் நிறைவு செய்து விடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவது எளிதாகவும், விரைவாகவும் நடைபெறும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் நம்புவதாக தெரிகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் எஸ்யூவியான ஜிஎல்சி-யின் பிஎஸ்-6 வெர்ஷனை நேற்றுதான் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப விலை 52.56 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்).

பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை உயரவுள்ளது. குறிப்பாக டீசல் வாகனங்களின் விலை சற்று அதிகமாகவே உயரலாம். எனவே விலை உயர்வை தவிர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போதே பிஎஸ்-4 வாகனங்களை வாங்கி கொள்வது நல்லது. வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்யப்படாது.


Click it and Unblock the Notifications








