எக்கச்சக்கமான வசதிகளுடன் சந்தையை கலக்க வரும் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!
இந்திய வாடிக்கையாளர்களை அசரடிக்கும் அம்சங்களுடன் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது.

உலகின் பாரம்பரியம் மிக்க எம்ஜி பிராண்டு மூலமாக இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது சீனாவை சேர்ந்த செயிக் குழுமம். எம்ஜி பிராண்டில் முதலாவது மாடலாக ஹெக்டர் என்ற சி செக்மென்ட்டிலான ரக எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதாவது, ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு இணையான ரகத்தில் இந்த புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி களமிறக்கப்பட இருக்கிறது. வரும் ஜூன் மாதம் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில், இந்த புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ரகத்திலேயே உருவத்தில் மிக பிரம்மாண்டமான மாடலாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன், இந்த எஸ்யூவியில் 1,460 மிமீ நீளமும், 832 மிமீ அகலமும் கொண்ட பிரம்மாண்ட சன்ரூஃப் கொடுக்கப்பட இருக்கிறது. இதன் சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை எளிதாக நகரும் வகையிலும், மேல் நோக்கி சற்று தூக்கப்பட்டு நகரும் வகையிலும் இருக்கும்.

மேலும், 17 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சீரியல் லைட் போல ஒளிரும் அமைப்புடைய எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட் க்ளஸ்ட்டர் என மிக உயரிய சிறப்பம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கும்.

இந்த எஸ்யூவியில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். இதன் தொடுதிரையிலேயே ஏசி கட்டுப்பாட்டு வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 360 டிகிரி கேமரா, 4 ஸ்பீக்கர்கள், 4 டிவீட்டர்கள் மற்றும் சப் ஊஃபர் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு ஆகியவை இதர கவனிக்கத்தக்க அம்சங்களாக இருக்கும்.

இந்த புதிய மாடலில் புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, 6 நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் இடம்பெற உள்ளன.

இந்த காரில் பல்வேறு கோணங்களில் பாதுகாப்பை வழங்கும் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற உள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சினஅ 162 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்குகம். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கியாரண்டி.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








