மரண மாஸ் காட்ட போகும் புதிய எலெக்ட்ரிக் கார்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகள்... என்னவென்று தெரியுமா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பெரும் ஆரவாரத்துடன் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் கார் ஹெக்டர். கடந்த ஜூன் மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன், மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்தியர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கியுள்ளனர். இதனால் எம்ஜி மோட்டார் நிறுவனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக கார் ஆகும்.

டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு எம்ஜி ஹெக்டர் கார் வில்லனாக வந்துள்ளது. இந்த சூழலில் எம்ஜி நிறுவனம் அடுத்ததாக இஇஸட்எஸ் (MG eZS) என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இதுதான் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது கார். இந்தியாவில் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்து விட்டது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து, தாய்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட சர்வதேச மார்க்கெட்களில் எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 150 பிஎச்பிக்கும் நெருக்கமான பவரை வெளிப்படுத்த கூடிய திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டாரை எம்ஜி இஇஸட்எஸ் கார் பெற்றுள்ளது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும். இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 335 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். ஆனால் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விபரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி நெருங்கும் சமயத்தில் அந்த தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஹெக்டரை போலவே இந்தியாவில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படும் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக சார்ஜிங் ஸ்டேஷன்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் கட்டமைக்கவுள்ளது. இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காக டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் (Delta Electronics) நிறுவனத்துடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது கைகோர்த்துள்ளது.

வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட தனியார் வாகன பார்க்கிங் இடங்களில் இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணி, ஏசி சார்ஜர்களை நிறுவவுள்ளது. எம்ஜி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் அடுத்த தயாரிப்பான இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகும் செயல்முறைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஹெக்டர் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வெற்றியால், எம்ஜி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மீது வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்த நடவடிக்கையின் மூலமாக இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் கவனத்தை இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை நோக்கி திருப்ப முடியும் என எம்ஜி நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








