எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு!
பெங்களூரில் புதுமையான முறையில் கார் ஷோருமை அமைத்து ஆட்டோமொபைல் துறைக்கு புதிய பாதையை வகுத்து கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார் நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்தது. ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, வர்த்தக விரிவாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில் புதிய ஷோரூம்களையும் திறந்து வருகிறது.

இந்த நிலையில், எம்ஜி நிறுவனம் பெங்களூரில் புதிய கார் ஷோரூமை திறந்துள்ளது. பொதுவாக கார் ஷோரூம் என்றாலே, பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில், கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இந்த முறையை தகர்க்கும் விதத்தில், முற்றிலும் டிஜிட்டல் ஷோரூமாக இதனை அமைத்துள்ளது எம்ஜி மோட்டார்.

இந்த புதிய ஷோரூமில் கார்கள் எதுவும் காட்சிக்கு நிறுத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக, பிரம்மாண்டமான டிவி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திரை மூலமாக காரை முப்பரிமாண முறையில் பார்க்கவும், காரின் சிறப்பம்சங்களை விளக்கிக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் மற்றும் இனி அறிமுகம் செய்யப்பட இருக்கும் அனைத்து எம்ஜி ஹெக்டர் கார்களை இந்த ஷோரூமில் உள்ள டிவி திரைகள் மூலமாக 360 டிகிரி கோணத்தில் பார்த்து வாடிக்கையாளர்கள் முடிவு எடுத்துக் கொள்ள முடியும். வெளிநாடுகளில் ஆடி உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் இதேபோன்ற டிஜிட்டல் கார் ஷோரூம்களை அமைத்துள்ளன.

இந்த டிஜிட்டல் கார் ஷோரூம்களுக்கு பெரிய அளவிலான இடம் தேவைப்படாது. இந்த ஷோரூம் வெறும் 600 சதுர அடியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, டீலர்களுக்கான முதலீடு வெகுவாக குறையும். நகரின் முக்கிய இடங்களிலையே ஷோரூமை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கார்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தியை தரும் வகையில், அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த டிஜிட்டல் ஷோரூம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








