புதிய ஹோண்டா ஜாஸ் கார் குறித்த ஏமாற்றமான தகவல்!
புதிய ஹோண்டா ஜாஸ் வருகை குறித்து இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் முக்கிய போட்டியாளராக விளங்குகிறது. அனைத்து விதத்திலும் சிறப்பாக இருந்தாலும், விற்பனையில் மிக சுமாரான எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், வடிவமைப்பு மற்றும் வசதிகளில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாடலாக ஹோண்டா ஜாஸ் கார் அண்மையில் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கார் இந்தியாவிலும் வரும் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஆவலோடு ஹோண்டா பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களது கணக்கு தப்புக் கணக்காக மாறிவிடும் என்று தெரிகிறது. ஆம். புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியம் மிக குறைவாக இருக்கிறது.

ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான அதீத தர கட்டுப்பாட்டு நிர்ணயத்துடன் ஹோண்டா ஜாஸ் கார் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் ஏ பில்லரின் தடிமன் மிக குறைவாக இருந்தாலும், மிக உறுதிமிக்க தர நிர்ணயித்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது.

இந்த காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அப்படி முதலீடு செய்து விற்பனைக்கு கொண்டு வந்தாலும், விற்பனை அந்தளவு இருக்காது என்று ஹோண்டா கணித்துள்ளது. எனவே, புதிய தலைமுறை ஜாஸ் காரை அறிமுகப்படுத்தி சூடுபட்டுக் கொள்ள வேண்டாம் என்று மிகவும் பாதுகாப்பாக இந்திய வர்த்தகத்தை கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளது.

எனவே, நான்காம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதேநேரத்தில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் விரைவில் வர இருப்பதால், அதற்கு தக்க மாடல் அவசியமாகிறது.

எனவே, தற்போது உள்ள ஜாஸ் காரில் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளுடன் தொடர்ந்து விற்பனை செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, புதிய தலைமுறை ஜாஸ் கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் வர இருக்கும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு தக்கவாறே இப்போதைய மூன்றாம் தலைமுறை மாடல் வடிவமைக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த கார் தொடர்ந்து அடுத்த ஓரிரு ஆண்டுகள் விற்பனையில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








