இறுதி கட்டத்தில் புதிய ஹோண்டா சிட்டி கார் உருவாக்கப் பணிகள்!
புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் உருவாக்கப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் விற்பனையில் கொடி கட்டி பறந்து வந்த ஹோண்டா சிட்டி காரை அடக்கி விட்டது மாருதி சியாஸ் கார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட 4ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் போட்டியில் பின்தங்கி விட்டதுடன், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஹோண்டா கார் நிறுவனம் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. அதற்கு தக்கவாறு வாடிக்கையாளர்களை கவரும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும், அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

பெட்ரோல் மாடல் தவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறதாம்.

தவிரவும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு மின் மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலிலும் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி கார் டிசைனில் எல்லோராலும் விரும்பப்படும் மாடல். இந்த நிலையில், புதிய தலைமுறை மாடல் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக வரும் என்பதால், ஹோண்டா ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது. அதேபோன்று, தொழில்நுட்ப அம்சங்களிலும் குறைவில்லாத மாடலாக இருக்கும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாகவும், மார்ச் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் டீம் பிஎச்பி செய்தி கூறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படியான அறிமுகம் இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








