புதிய வரலாறு எழுதப்போகும் மஹிந்திரா கார்! இன்னும் ஒரு சில வாரங்களில் லான்ச் ஆவதால் உற்பத்தி தொடக்கம்
மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி ரக கார்களின் உருவாக்கத்தில் மிகவும் புகழ்பெற்றது. ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ உள்ளிட்ட கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எஸ்யூவி ரக கார்தான் டியூவி300 (Mahindra TUV300). மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா டியூவி300 காருக்கு ஒரு சிறப்பு உள்ளது. மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார் என்றால், அது டியூவி300தான். ஆனால் மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு டியூவி300 கார் விற்பனையில் பெரிய அளவு சோபிக்கவில்லை. கணிசமான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகி வருகிறது.

எனவே டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன்படி புதிய 2019 மஹிந்திரா டியூவி300 கார் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டியூவி 300 எஸ்யூவி காரானது, மஹிந்திரா நிறுவனத்தின் லேடர் ஆன் ப்ரேம் சேஸியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் லேடர் ஆன் ப்ரேம் சேஸியுடனே தொடர்கிறது. இதில், எவ்வித மாற்றங்களும் இல்லை. மஹிந்திரா நிறுவனத்தின் முன்னணி மாடல்களில் ஒன்றான பொலிரோவும் லேடர் ஆன் ப்ரேம் சேஸியில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அப்டேட் செய்யப்பட்ட புதிய முன் பக்க க்ரில், புதிய பம்பர்கள் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படவுள்ளன. அதே சமயம் இதன் இன்டீரியரும் சற்று மட்டுமே மாற்றம் செய்யப்படவுள்ளது. என்றாலும் இன்டீரியரில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

அதே நேரத்தில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய டியூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும், இபிடி உடனான ஏபிஎஸ், ட்யூயல் ஏர் பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் ஹை ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் ஆகியவை ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளன.

T4+, T6+, T8, T10 மற்றும் டாப் எண்ட் வேரியண்ட்டான T10(O) என மொத்தம் 5 வேரியண்ட்களில், புதிய டியூவி300 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து வேரியண்ட்களிலும், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் என்ற ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படவுள்ளது.

இந்த சூழலில் டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக சில கார்கள் மஹிந்திரா நிறுவன டீலர்ஷிப்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி டீலர்ஷிப்பில் புதிய மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடல் உரு மறைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரை சமீபத்தில் சேர்த்தது. அதன் விற்பனையும் சக்கை போடு போட்டு வருகிறது. ஆனால் டியூவி300 காரின் விற்பனை மட்டும் மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இருந்தபோதும் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலின் மூலம் டியூவி300 காரின் விற்பனை அதிகரிக்கும் என மஹிந்திரா நிறுவனம் நம்புகிறது.
Image Courtesy: Cartoq


Click it and Unblock the Notifications








