சக்திவாய்ந்த எஞ்சினுடன் புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார்!
மாருதி செலிரியோ காரில் கூடுதல் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை காணலாம்.

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி செலிரியோ காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பான கார் மாடலாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை செலிரியோ காரை களமிறக்க மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் உள்ளிட்ட கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி செலிரியோ காரும் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளை மனதில் வைத்து புதிய மாருதி செலிரியோ கார் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், சிறப்பான கட்டமைப்பு தரத்துடன் மாருதி செலிரியோ கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் வந்த மாருதி வேகன் ஆர் கார் போன்றே புதிய மாருதி செலிரியோ காரிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த எஞ்சின் பொருத்தப்படுவதன் மூலமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக செலிரியோ கார் மேம்படுவதுடன் அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருவதால், போட்டியாளர்களையும் எளிதாக எதிர்கொள்ளும் வாய்ப்பையும் பெறும்.

மாருதி வேகன் ஆர் கார் போலவே, நகர்ப்புற பயன்பாட்டிற்கான கார் மாடலாக இல்லாமல், நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாடல் என்ற தகுதியையும் இந்த புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலமாக புதிய செலிரியோ கார் பெறும் வாய்ப்புள்ளது.

இதுதவிர்த்து, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளையும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ காரில் எதிர்பார்க்கலாம். இதனால், பட்ஜெட் கார்களில் சிறந்த மதிப்புடைய மாடலாக இருக்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியோகோ உள்ளிட்ட கார் மாடல்களால் எழுந்துள்ள சந்தைப் போட்டியை சமாளிப்பதற்கு புதிய தலைமுறை மாருதி செலிரியோ அவசியமானதாக கருதப்படுகிறது. வரும் அக்டோபருக்கு முன்பாக புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட மாருதி செலிரியோ கார்தான் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, பட்ஜெட் வாடிக்கையாளர்களின் தேர்வில் முக்கிய மாடலாக இருந்து வருகிறது.
Via GaadiWaadi


Click it and Unblock the Notifications








