புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது
புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா நிறுவனம் பல புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில், கரோக் எஸ்யூவியை வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி மாடல் அறிமுகம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் கமிக் என்ற எஸ்யூவியையும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கமிக் எஸ்யூவியானது வரும் 2021ம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸேக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய எஸ்யூவியானது எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா ரகத்தில் 4.2 மீட்டர் முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக வருகிறது.

வெளிநாட்டு மாடலைவிட இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கமிக் எஸ்யூவியின் வீல் பேஸ் சற்றே கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால், பின்புற இருக்கையில் அமரும் பயணிகளுக்கு அதிக இடவசதி ஏற்படும் வாய்ப்புள்ளது.

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் கேபின் லைட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இந்த காரில் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலையும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பான கார் என்பதுடன் ஸ்கோடாவின் தோதான பட்ஜெட் விலையிலான எஸ்யூவி மாடலாக இருப்பதால், அதிக வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








