ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியானது!
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பல புதிய மாடல்களுடன் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பெறுவதற்கு கங்கணம் கட்டி களமிறங்கி உள்ளது. புரொஜெக்ட் 2.0 என்ற பெயரிலான தனது புதிய வர்த்தக திட்டத்தின் கீழ் பல புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட உள்ளது. அதில், கரோக் எஸ்யூவியும் முக்கிய மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்கோடா கரோக் எஸ்யூவி வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கார் இறக்குமதிக்கான புதிய சலுகையின்படி, முதல் 2,500 கார்களை எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். இதனால், இந்தியாவுக்கு தக்கவாறு மாற்றங்கள் செய்வதற்கான செலவீனம் மிச்சமாகிறது. இதனை பயன்படுத்தி இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கிறது.

அதேநேரத்தில், இறக்குமதி வரி பொருந்தும். எனவே, இந்த எஸ்யூவி கார் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதையடுத்து, விலை சற்றே அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 150 எச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்த 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

வெளிநாடுகளில் ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 115 எச்பி பவரை அளிக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் கரோக் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வை வழங்கும் எண்ணமும் ஸ்கோடா நிறுவனத்தின் வசம் உள்ளது.

அதாவது, இந்த எஸ்யூவியில் 115 எச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின், 150 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 189 எச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கைவசம் உள்ளது. இதில், இந்திய சந்தைக்கு பொருத்தமான டீசல் எஞ்சின் தேர்வை அறிமுகப்படுத்தும் திட்டம் ஸ்கோடா வசம் உள்ளது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஸ்கோடா நிறுவனம் இந்த கார் மீது அதிக நம்பிக்கையை வைத்து களமிறக்க உள்ளது. மேலும், புதிய மாடல்களுக்கு தக்கவாறு டீலர்ஷிப் எண்ணிக்கையையும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








