சொகுசு காருக்கு இணையான அம்சங்களுடன் வரும் புதிய ஸ்கோடா ரேபிட் கார்!
சொகுசு காருக்கு இணையான அம்சங்களுடன் புதிய ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்துள்ளது.

சந்தை நெருக்கடியால் ஆண்டுக்கு இருமுறைகூட கார்களில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்யப்படும் நிலைக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுளளன. ஆனால், 2011ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து விற்பனையில் உள்ளது.

சிறந்த தயாரிப்பாக கூறப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்க இயலவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் பல புதிய மாடல்களை களமிறக்க ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம்தான் பொறுப்பேற்று செயலாற்ற உள்ளது.

இந்த திட்டத்தில் உருவாக்கப்படும் பல புதிய கார் மாடல்களில் ஸ்கோடா ரேபிட் காரும் இடம்பெற்றிருப்பதாக ஸிக்வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN என்ற இந்தியாவுக்கான பிரத்யேக பிளாட்ஃபார்மில் புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் உருவாக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

வரும் 2021ம் ஆண்டு இந்த புதிய மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ஸாக் ஹோலிஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், மெஷின் கட் அலாய் வீல்கள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெறும். இந்த புதிய மாடலில் ஸ்கோடாவின் பிரத்யேக மோடுலர் இன்ஃபோடெயின்மென்ட் மேட்ரிஸ் என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மேலும், சேட்டிலைட் நேவிகேஷன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சப்போர்ட் செய்யும். ஹூண்டாய் வெனியூ மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்களை போலவே, இந்த காரிலும் நேரடி இணைய வசதியை அளிக்கும் சிம் கார்டும் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் எவோ டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய மாடலில் இடம்பெற்றிருக்கும் எஞ்சின்கள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்பதுடன், தற்போதைய சில எஞ்சின் ஆப்ஷன்களை கைவிடுவதற்கும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் கார் சந்தையில் மிக முக்கிய தேர்வாக நிலைநிறுத்திக் கொள்ளும் அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








