இந்தியாவில் டட்சன் கார் பிராண்டுக்கு மூடுவிழா நடத்த நிஸான் முடிவு?
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டட்சன் கார் பிராண்டுக்கு மூடுவிழா நடத்த நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜப்பானிய நிறுவனமான நிஸான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், புதிய கார் உருவாக்கப் பணிகள், உற்பத்தி ஆகியவற்றை ஒன்றாக வைத்திருந்தாலும், விற்பனையை தனியாக செய்து வருகின்றன.

இந்த நிலையில், நிஸான் - ரெனோ கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட கார்ல் கோஸன் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதுடன், புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்னையால் நிஸான் - ரெனோ கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், வர்த்தகத்தை சீராக்கும் முயற்சிகளையும், சிக்கன நடவடிக்கைகள் மூலமாக லாபத்தை பெருக்கும் நடவடிக்கைகளை நிஸான் மேற்கொண்டுள்ளது. முன்னாள் தலைமை செயல் அதிகாரி கார்ல் கோஸன் கொண்டு வந்த திட்டங்களை ஆய்வு செய்து அதனை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு இந்தியா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட வளரும் நாடுகளுக்காக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட டட்சன் கார் பிராண்டுக்கு மூடு விழா நடத்துவதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை குறைவான பட்ஜெட் கார்களை டட்சன் பிராண்டில் நிஸான் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக டட்சன் பிராண்டின் விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாததையடுத்து, இந்த முடிவை நிஸான் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், சென்னையில் இயங்கி வரும் நிஸான்- ரெனோ கார் நிறுவனத்தின் கார் ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, நூற்றுக்கணக்கான பணியாளர்களை சென்னை ஆலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்த நிஸான் தற்போது இந்த நடவடிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கத் துவங்கி இருப்பதாக தெரிகிறது. உலக அளவில் 12,500 தொழிலாளர்களை பணியிலிருந்து விடுவிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, நிஸான் நிறுவனத்தின் மிக முக்கிய மார்க்கெட்டாக கருதப்படும் அமெரிக்காவில் டாக்சி நிறுவனங்கள் மற்றும் செல்ஃப் டிரைவிங் கார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அதிக தள்ளுபடி திட்டங்களை நீக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால், பிராண்டு மதிப்பும் குறைவதாக அந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக வரும் காலத்தில் வர்த்தகத்திலும், லாபத்திலும் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பையும், வளர்ச்சியையும் பெற முடியும் என்று நிஸான் கருதுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Reuters


Click it and Unblock the Notifications








