இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மலிவான விலை கார் தமிழகத்தில் உலாவுகிறது... முதல் முறையாக வீடியோ
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மிக மலிவான விலை கார், தமிழகத்தில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 2021ம் ஆண்டிற்குள் இந்திய மார்க்கெட்டில் தனது கார் விற்பனையை இரட்டிப்பாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மாடல்களில், ரெனால்ட் க்விட் காரின் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் சார்ந்த 7 சீட்டர் எம்பிவி ரக காரும் ஒன்று.

ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த காரின் அதிகாரப்பூர்வ பெயரை ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில்தான் அறிவித்தது. இதன்படி அந்த காருக்கு ட்ரைபர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால் முதல் முறையாக தற்போது ரெனால்ட் ட்ரைபர் காரின் வீடியோ வெளியாகியுள்ளது. கார்டாக் தளம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தமிழகத்தில்தான் எங்கேயோ எடுக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டதால், இதன் பக்கவாட்டில் ட்ரைபர் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் முழுவதும் உரு மறைப்பு செய்யப்பட்டிருந்ததால், அதன் டிசைன் அம்சங்களை தெளிவாக கண்டறிய முடியவில்லை.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரைபர் எம்பிவி இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. என்றாலும் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரெனால்ட் நிறுவனம் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்மில் பல்வேறு மாற்றங்களை செய்துதான் ட்ரைபர் காரில் பயன்படுத்தியுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெறவுள்ளது. இதன் முன் பகுதி டிசைன் ரெனால்ட் க்விட் காரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வந்தாலும் கூட, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களை காட்டிலும் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரின் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின் விபரங்கள் எதுவும் தற்போது வரை உறுதியாக வெளியாகவில்லை. இருந்தபோதும் டர்போசார்ஜ்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் நிஸான் மைக்ரா காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் ரெனால்ட் நிறுவனத்தால் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுதவிர ரெனால்ட் க்விட் காரில் உள்ள 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேடட் இன்ஜினை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ஒதுக்கி விட முடியாது.

ஆனால் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில், டீசல் இன்ஜின் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏனெனில் மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளன. சிறிய டீசல் இன்ஜின்களை இந்த விதிமுறைகளுக்கு இணங்க வைப்பது என்பது மிகவும் சவாலானது என்பதே இதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications








