புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்
ஸ்கோடா கமிக் எஸ்யூவி இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வர்த்தகத்தை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பல புதிய எஸ்யூவி மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்குவதற்கு ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்துள்ளது.

அதில், மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மாடலாக ஸ்கோடா கமிக் எஸ்யூவி உள்ளது. இந்த நிலையில், ஸ்கோடா கமிக் எஸ்யூவி இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படுவது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த புதிய கமிக் எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த சூழலில், அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், ஸ்கோடா கமிக் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய சாலைகளில் கமிக் எஸ்யூவியின் செயல்திறன் மற்றும் இதர விஷயங்கள் குறித்து முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தக்கவாறு மாற்றங்கள் செய்து உற்பத்திக்கு கொண்டு வரப்படும்.

ஐரோப்பிய மாடலைவிட இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் கமிக் எஸ்யூவி சற்று கூடுதல் நீளம் கொண்டதாகவும், அதிக வீல் பேஸ் உடையதாகவும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புற இடவசதி சிறப்பாக இருக்கும்.

இந்த புதிய மாடல் இந்தியாவுக்கான ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0-ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. டிசைன் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால், இந்தியாவில் வர இருக்கும் மாடலில் அதிக அளவு க்ரோம் பூச்சுடைய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலில் இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் தேர்வில் வழங்கப்படும். இந்த எஞ்சின்களுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

சிஎன்ஜியில் இயங்கும் மாடல்களிலும் இந்த எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கான சாத்திக்கூறுகள் குறித்தும் ஸ்கோடா ஆட்டோ பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்று தெரிகிறது.

புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும். வரும் 2021ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Source: Overdrive


Click it and Unblock the Notifications








