எக்கச்சக்க டிமாண்ட்... பவர்ஃபுல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் விரைவில் அறிமுகமாகிறது
இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா காரின் மிகவும் சக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மாடலாக ஆக்டேவியா ஆர்எஸ் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவுக்காக 300 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. வந்த வேகத்தில் அனைத்து கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கடந்த ஆண்டு 200 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவையும் வந்த மாத்திரத்தில் முன்பதிவு ஆனது. இதனால், இந்த காரை வாங்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஆக்டேவியா ஆர்எஸ் காரை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்த கார் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் வீடியோ டீசர் மூலமாக புதிய ஆக்டேவியா ஆர்எஸ் இந்தியா வருவது உறுதியாகி இருக்கிறது.

இந்த முறை 200 ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. அத்துடன் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் தனித்தனி பேட்ஜ் பொறிக்கப்பட்டதாக இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன.
ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் புதிய தலைமுறை மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இது அதிக சக்திவாய்ந்த மாடல் என்பதுடன், பழைய மாடலைவிட தரை இடைவெளி குறைவாக அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கும்.

இந்க புதிய மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் 245 எச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய மாடலைவிட 15 எச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும்.

இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த காரில் கூடுதல் வசீகரத்தை தரும் விசேஷ பாடி கிட், 18 அங்குல அலாய் வீல்கள் என சாதாரண மாடலைவிட கவர்ச்சியாக இருக்கும். இதன் சக்திவாய்ந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பனி விளக்குகள், பகல்வேளை விளக்குகள், ஸ்டீல் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழல், பூட் ஸ்பாய்லர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கார் ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலயைில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








