டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலின் ஸ்பை படங்கள் கசிந்தன... முழுமையான தகவல்!
டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த நெக்ஸான் மாடல், எலெக்ட்ரிக் வேரியண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசோதனைக்கு உட்படுத்தும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகனச் சந்தையின் எதிர்காலம் எலெக்ட்ரிக் வாகனங்களைச் சார்ந்தே அமைய இருக்கின்றது. இதற்கான நடவடிக்கையில் இந்திய வாகனத்துறை மும்பரமாக செயல்பட்டு வருகின்றது.
அதற்கேற்ப வகையில், மின்வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், அண்மைக் காலங்களாக அவை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்காரணமாக, இந்தியாவில் இயங்கி வரும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், டாடா நிறுவனம் அதன் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட நெக்ஸான் மாடலை எலெக்ட்ரிக் ரகத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள இந்த காரின் ஸ்பை படங்கள்தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. சப்-4 மீட்டர் ரகத்தில் உருவாகியுள்ள நெக்ஸான் எஸ்யூவி ரக காரை, டாடா நிறுவனம் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. அவ்வாறு, சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

டாடா நெக்ஸான், ஏற்கனவே இந்தியாவில் எரிபொருள் மாடலில் விற்பனையாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் பாதுகாப்பு தரத்தில் 5 நட்சத்திரங்கள் கொண்டதாக இருக்கின்றது.
ஆகையால், இது இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. எனவே, இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, நெக்ஸான் காரில் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக, இதேபோன்று புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் மாடலின் ஸ்பை படங்களும் வெளியாகியிருந்தன. இந்த புகைப்படத்தில் காட்சியளித்த, அதே தோற்றத்தில்தான் புதிய எலெக்ட்ரிக் மாடல் நெக்ஸானும் காட்சியளிக்கின்றது.

ஆகையால், எரிபொருள் மற்றும் மின்சார தரத்தில் களமிறங்கும் இரு நெக்ஸான் வேரியண்டுகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இருப்பினும், அதில் சில மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நிறுவனம் இம்பேக்ட் 2.0 டிசைனில் தயாரித்துள்ள நான்காவது மாடலாக நெக்ஸான் புதுப்பிக்கப்பட்ட மடால் இருக்கின்றது. முன்னதாக, ஹாரியர், அல்ட்ராஸ் மற்றும் சிறிய ரக எஸ்யூவி மாடல் எச்2எக்ஸ் மாடல்கள் தயாரிக்கப்பட்டன.

ஆகவே, புதிய டிசைன் தாத்பரியத்தில் நெக்ஸான் தயாராகியிருக்கின்றது. இது, தற்போதைய மாடலைக் காட்டிலும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், புதுப்பிக்கப்பட்டுள்ள நெக்ஸானின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் இன்டீரியர் என அனைத்து பகுதிகளும் மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கின்றது.

இதேபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காட்சியளிக்கின்றது. இந்த கார் ஒரு முழுமையான சார்ஜில் 220 கிமீ தூரம் வரை செல்லும் என டாடா நிர்வாகம் தெரிவிக்கின்றது. மேலும், இந்த கார் ரூ. 15 லட்சம் என்ற விலையில் களமிறங்கலாம் என கூறப்படுகின்றது.

டாடா நிறுவனம், நெக்ஸான் மட்டுமின்றி அல்ட்ராஸ் மற்றும் டிகோர் உள்ளிட்ட மாடல்களிலும் எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளது. இத்துடன், பெயரிடப்படாத ஓர் புதிய மின்சார காரையும் டாடா தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், டாடா நிறுவனத்தின்கீழ் நான்கு மாடல் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக இருக்கின்றது.

ஆனால், இதில் ஏற்கனவே டாடா நிறுவனத்தின் டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இருக்கின்றது. இந்த கார், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இல்லாமல், கமர்ஷியல் பயன்பாட்டிற்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு முழுமையான சார்ஜில் 140 கிமீ தூரம் வரை செல்லும். இந்த குறுகிய ரேஞ்சை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையில் டாடா நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஆகையால், அதிக தூரம் செல்லும் டாடா டிகோர் அடுத்த வருடம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








