டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் மீண்டும் சோதனை ஓட்டம்...
டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகத்திற்கு முன்னதாக தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் அறிமுகம் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் முந்தைய மாடலை விட முன்புறத்தில் கூடுதலான நீளத்தை பெற்றுள்ளது. இதனால் டிகோரின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கார் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளது.

வெளியாகி வருகின்ற இதன் சோதனை ஓட்டங்களின் மூலம் இந்த கார் புதிய தேன்க்கூடு வடிவிலான க்ரில் அமைப்பை பெற்றிருப்பது தெரிய வருகிறது. அதேபோல் செங்குத்தாக பொருத்தப்பட்ட டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்களுடன் உள்ள பிளவுப்பட்ட ப்ரோஜக்டர் ஹெட்லைட்ஸையும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இவை மட்டுமின்றி, புதிய டிசைனில் பம்பர், ஃபாக் விளக்குகளை பொருத்துவதற்காக புதுமையான வடிவில் குழி, தாழ்வாக பொருத்தப்பட்டுள்ள க்ரில் பார்களையும் இந்த 2020 மாடல் கார் பெற்றுள்ளது. உட்புறத்தில், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 7.0 இன்ச் ஹர்மன் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொண்டுவரப்பட்ட அப்டேட்கள் போன்ற தற்போதைய மாடலை தான் இந்த புதிய மாடலும் பின்பற்றியுள்ளது.

டாடா நிறுவனம் செலவு மிகுதியால் டீசல் வேரியண்ட் கார்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்ற போவதில்லை என்கிற நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் டிகோர் ஃபேஸ்லிஃப்ட், பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும் தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டிகோர் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 84 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் வெளியிடும் ஆற்றல் அளவுகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகின்றன. டாடா டிகோரின் பெட்ரோல் வேரியண்ட் கார் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.7.44 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் ரூ.25,000 வரையில் கூடுதலாக விற்பனை செய்யப்படலாம்.

இந்த காரின் சோதனை ஓட்டம் ஒருபுறம் இருக்க, டாடா நிறுவனம் சமீபத்தில் புதிய நெக்ஸான் இவி மாடலுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இதன் டீலர்ஷிப்களிடம் நெக்ஸான் இவி காருக்கு முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் கார் குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

வாடிக்கையாளர்கள் கவனத்தை தொடர்ந்து பெற டாடா நிறுவனம் தனது பிரபலமான கார் மாடல்களை அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய டிகோர் கார் உண்மையில் ஸ்டைலான முன்புறத்தை கொண்டுள்ளது. அதேபோல் பிஎஸ்6 மாற்றப்படும் என்ஜினின் தரமும் சிறப்பாக அமைந்தால் நிச்சயம் இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைக்கும்.
Image Courtesy: Electricvehicleweb


Click it and Unblock the Notifications








