சந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக அதிரடியான அறிவிப்பு ஒன்றை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விரைவில் வெளியிடுகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினால், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு நம்புகிறது.

இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சுற்றுச்சூழலையும், எலெக்ட்ரிக் வாகனங்களின் உதவியுடன் பாதுகாக்க முடியும். எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் சாலைகளுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற விஷயத்தில், உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம் என கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அவர் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வெறுமனே சொன்னதுடன் நிற்காமல், ஃபேம் இந்தியா திட்டத்தின் (FAME India - Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) இரண்டாம் கட்டத்திற்காக (Phase II) மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி ஆச்சரியப்படுத்தியது. ஃபேம் இந்தியா என்பது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் ஆகும்.

ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. ஃபேம் இந்தியா-2 திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே மத்திய அரசு வெளியிட்டு விட்டது. மத்திய அரசு தவிர கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஆர்வமாக உள்ளன.

குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற விஷயத்தில் ஆந்திர பிரதேசம் வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இதற்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவே முக்கிய காரணம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்த இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் விரிவான எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அத்துடன் வரும் 2024ம் ஆண்டிற்கு பின்பாக, பெட்ரோல், டீசல் கார்களை பதிவு செய்வது நிறுத்தப்படும் எனவும் ஆந்திர பிரதேச அரசு துணிச்சலாக அறிவித்துள்ளது. அதே சமயம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை சாலைக்கு கொண்டு வரவும் ஆந்திரா முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் கவனத்தை ஆந்திரா ஈர்த்தது.

இந்த சூழலில் ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலங்கானாவும் தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கையை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா முழுக்க நாடாளுமன்ற பொது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

எனவே தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன், தெலங்கானா மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை வெளியிடப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா மாநில அரசின் உயரதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். முன்னதாக தெலங்கானா மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை கடந்த ஆண்டே வெளியிடப்படுவதாகதான் இருந்தது.

ஆனால் திடீரென அந்த திட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த சூழலில்தான் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தெலங்கானாவின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் தற்போது முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் எனப்படும் தெலங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது முதலே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








