இந்த வருடமே இந்தியாவில் களமிறங்குகிறது டெஸ்லா!
இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிடம் சுபம் ரதி என்ற இந்தியர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்குவதற்கு டெஸ்லா மின்சார கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கே டெஸ்லாவின் சொகுசு மின்சார கார் மாடல்கள் சவாலாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் கார் சந்தையாக கருதப்படும் இந்தியாவிலும் தனது கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெஸ்லா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டே இந்தியாவில் தனது மின்சார கார்களை களமிறக்கும் திட்டத்தை அறிவித்தது.
ஆனால், மின்சார கார்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஊக்குவிப்பு திட்டங்கள் போதிய திருப்தி தராததும், போதிய சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தனது திட்டத்தை தள்ளி போட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்குவதற்கு டெஸ்லா திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கிடம் சுபம் ரதி என்ற இந்தியர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள அவர், இந்த ஆண்டே இந்தியாவில் கால் பதிப்பதற்கு விரும்புகிறோம். அல்லது அடுத்த ஆண்டு நிச்சயம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதில் இந்தியாவில் உள்ள டெஸ்லா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டே சில வாடிக்கையாளர்கள் டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவியை இறக்குமதி செய்து வாங்கினர். மேலும், அதே ஆண்டு டெஸ்லாவின் விலை குறைவான மாடல் 3 செடான் காருக்கு உலக அளவில் ஆன்லைனில் புக்கிங் துவங்கப்பட்டது.

அப்போது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலக அளவில் முண்டியடித்து புக்கிங் செய்தனர். அதில், பல இந்தியர்களும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். முன்பதிவு செய்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்வதற்காக மாடல் 3 காரின் உற்பத்தியை டெஸ்லா நிறுவனம் தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய கார் 45,000 டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.31 லட்சம் விலையில் கிடைக்கும். மேலும், வரிகள் உள்பட ரூ.40 லட்சம் அடக்க விலையில் கிடைக்கலாம். இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களின் ஆரம்ப விலை செடான் கார்களுக்கு கடும் நெருக்கடியை தரும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனால்ட் உள்ளிட்ட பல கார் நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இதற்கு ஆதரவு தரும் வகையில், புதிய மானியத் திட்டத்தையும் மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார கார்களுக்கான யுகம் இந்தியாவில் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார கார்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்பதால், கார்களின் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








