செல்லப்பிராணிகளுக்காக காரில் மாற்றம் செய்யும் டெஸ்லா!
அமெரிக்காவைச் சேர்ந்த தானியங்கி மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், தனது கார்களில் புதிதாக 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' எனப்படும் புதிய இரண்டு மோட்களை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம் மின்சார தானியங்கி கார்களைத் தயாரித்து வருகிறது. உலகின் அதிநவீன கார்களாக பார்க்கப்படும் இவை முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்குகின்றது.
ஓட்டுநர் இன்றி தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் உலக செல்வந்தர்கள் மத்தியில் இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த காருக்காக அமெரிக்காவில் பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த கார் இன்றளவும் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கவில்லை. இதற்கு இந்திய அரசின் சில விதிமுறைகள் தடையாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
டெஸ்லா இதுவரை மாடல்3, மாடல் எஸ், மாடல் எக்ஸ், ரோட்ஸ்டெர் மற்றும் செமி ஆகிய ஐந்து மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், விற்பனையை அதிகரிக்கும் விதமாக மாடல்3யின் விலையை அந்த நிறுவனம் சமீபத்தில் குறைத்து அறிவித்தது.

ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் வருகையால், மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் கலக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், மாடல்3யின் மீதான விலை குறைப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறலாம்.
இந்நிலையில், டெஸ்லாவின் வாடிக்கையாளர் ஒருவர் அந்நிறுவனத்தை டேக் செய்து டுவிட்டரில் கேள்வியெழுப்பி பதிவிட்டிருந்தார். அதில், "என்னுடைய சகோதரர் ஒருவரின் கார் கண்ணாடி கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார்களில் 'சென்ட்ரி மோட்' எப்போது கிடைக்கும்" என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க், அவரது டுவிட்டர் பக்கத்தில், டெஸ்லா காரில் செல்லப்பிராணிகளுக்கான 'டாக் மோட்' மற்றும் 'சென்ட்ரி மோட்' ஆகிய இரண்டு மோட்களையும் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பதில் டுவிட் செய்திருந்தார்.
இந்த இரண்டு மோட்களும், காரின் உரிமையாளர்கள் கவனத்திற்காகவும், செக்யூரிட்டிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சென்ட்ரி மோட் என்பது காரின் 360 டிகிரி எக்ஸ்டெர்னல் வியூவைக் காணக்கூடிய வசதியாகவும். இந்த வசதி மூலம் காரின் வெளிப்புறத்தை காண்பதுடன், ரெக்கார்ட் மோட் மூலம் காரின் அருகில் நடைபெறும் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இதனால், காரில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

டாக் மோட், செல்லப்பிராணி பிரியர்கள் தங்களது செல்லப்பிராணிகளை வாகனங்களில் வெளியே அழைத்துச் செல்லும்போது, மறதியாக காருக்குள்ளேயே விட்டுவிட்டு செல்ல நேர்ந்தால், இந்த மோடின் மூலம் காருக்கு உள்ளே காலநிலை விலங்குகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதனால், உங்கள் செல்லப்பிராணி அசௌகரியமாக உணர்வது தடுக்கப்படும்.

டெஸ்லாவின் இந்த நடவடிக்கை செல்லப்பிராணி பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், கூடுதல் செக்யூரிட்டி வசதியை வரும் வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதால், காரின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









